மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள டி20 தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்துள்ள படுதோல்வி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் அடுத்ததாக இந்திய அணி பங்கேற்க உள்ள அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும் என்றும் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐசிசி தொடர்களை வெல்லக் கூடிய அணியை உருவாக்கும் வகையில் நடவடிக்கையை பிசிசிஐ தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு சரியாக 30 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் இடத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் ரஞ்சி டிராபி தொடரிலும் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருபவர்கள்.
குறிப்பாக முகேஷ் குமார் பெங்கால் அணிக்காக பல்வேறு போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே டெல்லி அணியால் முகேஷ் குமாருக்கு பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டார். அதேபோல் டி20 கிரிக்கெட் தொடரில் இஷான் கிஷன், ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்டோர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இருவருமே சீரற்ற முறையில் பேட்டிங் ஆடி வருகின்றனர்.
இதனால் மற்றொரு இடதுகை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரது இடத்தில் விளையாட வாய்ப்புகள் உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்பட்டால் விக்கெட் கீப்பராக நிச்சயம் ஜித்தேஷ் சர்மா களமிறங்கியே ஆக வேண்டும். ஏனென்றால் இஷான் கிஷன் மட்டுமே விக்கெட் கீப்பராக இருக்கிறார். அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் ஆகியோரையும் டி20 கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ தேர்வு குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.