ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இதுவே ஜெய்ஸ்வால் அடிக்கும் முதல் சதம். இந்த சதத்தின் மூலம், சும்பம் கில் படைத்த சாதனை ஒன்றை உடைத்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.

இந்தியா - நேபாள அணிகள் ஆசிய விளையாட்டுத் தொடரின் டி20 காலிறுதி போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் வென்றால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்பதால் நேபாளம் கடுமையாக போராடியது.
ஏற்கனவே, இதே மைதானத்தில் இரண்டு குரூப் சுற்றுப் போட்டிகளில் ஆடி இருந்த நேபாள அணி பந்துவீச்சில் இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்தது.
இந்த நிலையில், இந்திய அணியில் துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே தனி ஆளாக நின்று அதிரடி ஆட்டம் ஆடினார். கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் 25, திலக் வர்மா 2, ஜிதேஷ் சர்மா 5 ரன்கள் எடுக்க, ஜெய்ஸ்வால் கூட்டணி அமைக்கக் கூட ஆள் இன்றி 200 ரன் ஸ்ட்ரைக் ரேட்டில் பந்துகளை விளாசி வந்தார்.
48 பந்துகளில் 100 ரன்களை எட்டினார் ஜெய்ஸ்வால். இதுவே அவரது முதல் சர்வதேச டி20 போட்டி சதம். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ஜெய்ஸ்வால்.
முன்னதாக சுப்மன் கில் 22 வயதில் சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்து இருந்தார். அதை உடைத்துள்ள ஜெய்ஸ்வால் 21 வயதில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இந்திய அணியில் ஏற்கனவே நிரந்தர துவக்க வீரராக கால் ஊன்றி விட்டார் சுப்மன் கில். ஆனால், அவருக்கு போட்டியாக வரக் கூடிய தகுதி தனக்கு உள்ளது என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 202 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நேபாளம் 179 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 100 ரன்கள் அடித்ததே அதிகமாக இருந்தது.