பார்படாஸ்: இந்திய அணிக்கான 2 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதனால் சுப்மன் கில் மிடில் ஆர்டருக்கு கொண்டு செல்லப்படுகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 12ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இதில் ரோகித் சர்மா தலைமையில் பேட்ஸ்மேன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் பந்துவீச்சாளர்களும் களமிறங்கினர். இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 76 பந்துகளில் 54 ரன்கள் விளாசி ரிடையர்டாகி வெளியேறினார். அதேபோல் 67 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ரோகித் சர்மாவும் ரிடையர்டாகினார்.
பின்னர் வந்த சுப்மன் கில் 27 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க, விராட் கோலி 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உனாட்கட் பந்தில் அடடமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ரஹானேவும் உனாட்கட் வேகத்தில் ஆட்டமிழந்தார். பின்னர் கேஎஸ் பரத் 9 ரன்கள் எடுத்து ரிடையர்டாகினார். தொடர்ந்து அக்சர் படேல் 63 பந்துகளில் 35 ரன்களும், மீண்டும் களமிறங்கிய ரஹானே 49 பந்துகளில் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
மொத்தமாக 64 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் ரோகித் சர்மா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட்டது. இந்த பயிற்சி ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி இருக்கும் போது, இடதுகை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.
இதன் மூலம் ருதுராஜ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஒரேயொரு இடத்திற்கு மட்டுமே போட்டிபோடுவது தெரிய வந்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராகவோ அல்லது 3வது இடத்திலோ களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.