ஜெய்ஸ்வாலுக்கு 5 போட்டிகள் தடை முதல் ஆயுள்தடை வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு.. என்ன நடந்தது?
கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் ஆடிய 2வது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோவுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு, 5 போட்டிகள் தடை முதல் ஆயுட்காலம் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில், அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 17 வது ஓவரின் கடைசி பந்தில் அவர் விக்கெட்டை இழந்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரையொருவர் முட்டிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமானது. மற்றொரு இந்திய வீரரான தேவ்தத் படிக்கல் சமாதானப்படுத்த முயன்றும் ஜெய்ஸ்வால் கட்டுப்படாமல் பெர்னாண்டோவை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றார். இதனால் மைதானத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

சர்வதேச போட்டிகளின் போது சக வீரரைத் தாக்குவது அல்லது வன்முறையில் ஈடுபடுவது ஐசிசி விதிமுறைகளின் கீழ் 'லெவல் 4' குற்றமாகக் கருதப்படுகிறது. ஐசிசி நடத்தை விதிகளின் கீழ் லெவல் 4 குற்றங்கள் தான் மிகவும் கடுமையானவையாகக் கருதப்படுகின்றன. இதில் நடுவர்கள், போட்டி நடுவர் அல்லது சக வீரர்களைத் தாக்குவது போன்ற செயல்களுக்குத் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.
ஐசிசி நடத்தை விதிமுறைகளின் பிரிவு 2.18 மற்றும் 2.19 இன் படி, மைதானத்தில் வன்முறையில் ஈடுபடும் வீரருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். இதன் கீழ், குறைந்தபட்சம் 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ஆயுட்காலத் தடை வரை விதிக்கவும் ஐசிசி விதிகளில் இடம் உள்ளது.
ஜெய்ஸ்வால் இதுபோன்ற ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த 2022 துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் போது, தெற்கு மண்டல வீரர் ரவி தேஜாவுடன் ஜெய்ஸ்வால் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டார். அப்போது நடுவர்கள் எச்சரித்தும் அவர் கேட்காததால், மேற்கு மண்டல கேப்டன் அஜின்கியா ரஹானே தலையிட்டு ஜெய்ஸ்வாலை மைதானத்தில் இருந்து வெளியே அனுப்பி வைத்தார்.
அப்போது போட்டி நடுவர் ஜெய்ஸ்வாலுக்கு 4 போட்டிகள் தடை விதிக்கத் தயாராக இருந்தார். ஆனால் ரஹானே தனது சக வீரரைக் கண்டித்ததை அடுத்து அந்தத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 265 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். பின்னர் 2023 இல் அவர் இந்திய அணியிலும் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது மீண்டும் மைதானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதால் ஜெய்ஸ்வாலுக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அவரை சீண்டிய இலங்கை வீரருக்கும் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications
