ஜெய்ஸ்வால் பண்ணது தப்பு.. நீங்க மட்டும் இலங்கை வீரர்களை சீண்டலாமா? அஜய் ஜடேஜா அறிவுரை
கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்ட இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சித்துள்ளார். பிறர் பேசும் சீண்டல்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை என்றால், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் களத்தில் ஸ்லெட்ஜிங் செய்யக்கூடாது என்று ஜடேஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் அசிதா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜெய்ஸ்வால், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உடல் ரீதியான மோதலிலும் இறங்கினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜூரல் மற்றும் சரண்ஷ் ஜெயின் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அஜய் ஜடேஜா, "இது மிகவும் ஆபத்தான எல்லை. இதில் மாற்றுக்கருத்து இல்லை. உடல் ரீதியான தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. முந்தைய போட்டியில் ஜெய்ஸ்வால் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது, நிரோஷன் டிக்வெல்லாவை வம்புக்கு இழுத்துப் பேசினார். வரம்புகளை மீறாத வரை இத்தகைய சீண்டல்கள் பரவாயில்லை என்று நாம் நினைப்போம்."
"ஆனால், தன்னைப் பார்த்துப் பிறர் சிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், மற்றவர்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது. திரும்பப் பெற முடியாத சீண்டல்களை நீங்கள் களத்தில் இருக்கும் போது மற்றவர்களிடம் கூறக் கூடாது" என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் ஜடேஜா தெரிவித்தார்.
இந்த மோதலின் போது ஜெய்ஸ்வால் காட்டிய உடல் ரீதியான எதிர்வினை அவருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று அஜய் ஜடேஜா எச்சரித்தார். தற்போதைய போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் மிகவும் கடுமையானவர் என்பதால், தவறுகளைச் செய்யும் வீரர்களை அவர் எளிதில் விட்டுவிட மாட்டார் என்றும் ஜடேஜா குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications

