ஹாங்சோ : நேபாள அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்தில் இருந்தே தன் அதிரடியை துவக்கினார்.
எந்த பந்துவீச்சாளர் பந்து வீசினாலும், கொஞ்சம் கூட யோசிக்காமல் சிக்ஸ், ஃபோர் என அடித்துத் தள்ளினார் ஜெய்ஸ்வால். நேபாள அணி அவரை சமாளிக்க முடியாமல் நொந்து போனது.

இந்தியா - நேபாள அணிகள் இடையே ஆன டி20 காலிறுதி போட்டி சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
முதல் ஓவரில் இருவரும் ஆடுகளம் எப்படி இருக்கிறது என பார்க்க எடுத்துக் கொண்டனர். பவுண்டரி எதுவும் அடிக்கவில்லை. அடுத்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டு மிரள வைத்தார் ஜெய்ஸ்வால்.
மறுபுறம் ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா போன்றோர் நேபாள அணியின் பந்துவீச்சை கூட சமாளிக்க முடியாமல் திணறினர். ஆனால், "யார் வேணா பந்து வீசுங்க.." என ஒரு அதிரடி மனநிலையில் இருந்த ஜெய்ஸ்வால் அடித்து துவம்சம் செய்தார்.
22 பந்துகளில் எல்லாம் அரைசதத்தை எட்டினார் ஜெய்ஸ்வால். அவர் நின்று ஆடிய ஓவர் எல்லாமே 12 ரன்களுக்கும் மேல் தான் வந்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடிய ஓவர்கள் 5 முதல் 10 ரன்கள் என்ற அளவில் தான் இருந்தது.
தனது அதிரடியை தொடர்ந்த ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் தன் சதத்தை எட்டினார். சர்வதேச டி20யில் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் செய்தார். 7 சிக்ஸ் மற்றும் 8 ஃபோர் அடித்து தெறிக்கவிட்டார்.
துரதிஷ்டவசமாக சதம் அடித்த உடன் 49வது பந்தில் ஃபுல் டாஸ் பந்தை அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்து சரியாக 100 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால். மற்ற வீரர்கள் ரன் எடுக்கவே தடுமாறியதால் இந்திய அணியால் பெரிய இலக்கை எட்ட முடியவில்லை.