மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர இடதுகை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஜெய்ஸ்வாலை களமிறக்கினால், இந்திய அணிக்கு அது மிகப்பெரிய பலனை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19 முதல் மார்ச் 9 வரை நடத்தப்படவுள்ளது. ஹைபிரிட் மாடலில் நடப்பதால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்த ஒருநாள் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று தேர்வு குழு மற்றும் பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 359 ரன்களை விளாசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு மட்டும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,478 ரன்களையும் குவித்து சாதனை படைத்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கன்சிஸ்டன்சியை மனதில் வைத்து அவரை ஒருநாள் அணியிலும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மைகேல் தளத்திற்கு பிரத்யேகமாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கொடுத்த பேட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதனால் ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக சுப்மன் கில் அல்லது ஜெய்ஸ்வால் இருவரில் ஒருவர் களமிறங்குவார்கள். ஆஸ்திரேலியா மண்ணில் ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டத்தை பார்த்து தேர்வு குழுவினர் அசந்துவிட்டனர். அதனால் ஒருநாள் அணியிலும் விளையாடுவதற்கு ஜெய்ஸ்வாலுக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணி நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இடதுகை - வலதுகை கூட்டணியில் பேட்டிங் வரிசை இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுபவர். தற்போதைய சூழலில் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வாலை கடந்து வேறு சிறந்த டாப் ஆர்டர் இடதுகை பேட்ஸ்மேன் கிடையாது.
இதனால் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினால், சாம்பியன்ஸ் டிராபியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இந்திய ஒருநாள் அணியிலும் சுப்மன் கில்லுக்கு சிக்கல் ஏற்படலாம். ஏனென்றால் கடந்த 3 ஆண்டுகளாகவே சுப்மன் கில் தான் தொடக்க வீரராக விளையாடி வருகிறார். இதனால் யாருக்கு யார் பேக் அப் வீரராக தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.