Yashasvi jaiswal : அண்டர் 19 கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஐபிஎல் தற்போது இந்திய அணி என சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பெயரை வாங்கிவிட்டார் ஜெய்ஸ்வால். அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மற்ற இந்திய வீரர்கள் எல்லாம் 30 ரன்களை தாண்ட தடுமாறிய நிலையில் ஜெய்ஸ்வால் மட்டும் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
இந்த நிலையில் ஜெய்ஸ்வால் குறித்து பேசும் போதெல்லாம் அவர் பாணி பூரி விற்ற சிறுவன் என்றும் கடும் உழைப்பால் மேலே வந்தார் என்றும் ரசிகர்கள் கூறுவது உண்டு. மேலும் அவர் பாணி பூரி கடையில் வேலை பார்ப்பது போல் ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் சுற்றும். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் ஜூவாலசின் ஜெய்ஸ்வாலும் அவருடைய தந்தையும் பானி பூரி விற்றதாக மக்கள் கூறுவதை கேட்கும் போது எனக்கு கடுப்பாகவும் ஏமாற்றமாகவும் இருக்கும்.

ஏனென்றால் ஜெய்ஸ்வால் என்னை 2013 ஆம் ஆண்டு சந்தித்தார். கடந்த 9 ஆண்டுகளாக அவர் என்னுடன் தான் இருக்கிறார். என் குடும்பத்தில் ஒருவர் போல் ஜெயிஸ்வாலை நான் பார்த்துக்கொள்கிறேன். அவருடைய வாழ்க்கையில் ஏழ்மை என்று ஒரு விஷயம் இல்லவே இல்லை. அவர் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு டென்ட்டில் குடியிருந்தார்.
அப்போது சில வேலைகளை எல்லாம் அவர் செய்தாரே தவிர அவரோ அவரின் தந்தையோ பாணி பூரி விற்றது எல்லாம் கிடையாது. நான் ஜெய்ஸ்வாலை சட்டரீதியாக தத்தெடுத்துக் கொண்டிருக்கிறேன். அவரை என்னுடைய மகன் போல் பார்த்துக் கொள்கிறேன். இப்படி இருக்கும் போது அவர் பாணி பூரி விற்றார் என்று சொல்வது முற்றிலும் பொய்யான தகவல். மும்பையில் உள்ள சாண்டா குரூஸ் என்ற இடத்தில்தான் அவர் தங்கி இருந்தார்.
அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் செய்து கொடுத்திருக்கிறேன். அவருக்காக நான் பல மணி நேரம் பணம் ஆகியவற்றை செலவழித்து இருக்கிறேன். நீங்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றால் உங்களுக்கு பல வசதிகள் வேண்டும். அந்த வசதிகள் எல்லாம் நாங்கள் செய்து கொடுத்தோம். தற்போது ஜெய்ஸ்வால் தொடர்பான பொய் செய்திகளைக் கேட்டுக் கொண்டு சிலர் பாணி பூரி விற்றால் இந்திய அணிக்காக விளையாடலாம் என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.
அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதை மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெய்ஸ்வால் கடின உழைப்பை மேற்கொண்டார்.அவரிடம் திறமை இருக்கிறது. கடவுளின் அருள் இருக்கிறது. அவர் என்னுடன் வாழ்ந்த போது அவர் வாழ்க்கையில் ஏழ்மை கண்டிப்பாக இல்லை. ஜெய்ஸ்வால் தன்னுடைய ஒழுக்கத்தால் இன்னும் பல உயரத்தை நிச்சயம் தொடுவார் என்று பயிற்சியாளர் ஜுவாலாசி கூறியுள்ளார்.