மும்பை: இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் தொகுப்பாளர் ஒருவர், டேட்டிங் செயலிகள் பயன்படுத்தி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு கோபமடைந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் போட்டியிலேயே சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணியின் அடுத்த கங்குலி போல் அசாத்திய வீரராக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் என்று அனைத்து வடிவங்களுக்குமான திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்று அடுத்த தலைமுறைக்கான வீரர்களை இந்திய அணி மிகச்சிறப்பாக உருவாக்கி வருவதாக வெளிநாட்டு வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கிரிக்கெட் என்பது பணக்காரர்களுக்கான விளையாட்டாக இருந்து வந்த நிலையில், மும்பை தெருக்களில் வசித்து இன்று 20 வயதில் இந்திய கிரிக்கெட்டின் உச்சிக்கு சென்றிருக்கிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இதன் மூலம் இளைஞர்கள் பலரும் கிரிக்கெட்டை வாழ்க்கையாக மாற்றுவதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தொலைக்காட்சி பேட்டி வீடியோ ஒன்று ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. லல்லன்டாப் என்ற தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தொகுப்பாளர் கரீமா என்பவர், அண்மையில் கூகுள் செய்தவை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், அண்மையில் வெளியான பிசிசிஐ செய்தி என்ன என்று தேடினேன் என்று பதில் அளித்தார். இதையடுத்து, டேட்டிங் செயலிகள் பயன்படுத்துகிறீர்களா என்ற கேள்வி எழுப்ப, கோபமடைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகத்திலேயே கோபத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து நாகரீகம் கருதி, நான் அதுபோன்ற செயலிகளை பயன்படுத்தியதே இல்லை என்று பதில் அளித்தார்.
இந்த வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஒரு கிரிக்கெட் வீரரிடம் கேள்விகள் என்ன என்பதே அந்த தொகுப்பாளருக்கு தெரியவில்லை என்றும், எப்போதும் சொந்த வாழ்க்கை பற்றியே கேள்வி எழுப்பாமல் அவரின் கிரிக்கெட் பயணம் பற்றிய கேள்வியை எழுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.