மும்பை: ஐபிஎல் தொடரின் பரபரப்புக்கு இடையே யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய இளம் பேட்ஸ்மேனாக இருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இத்தனை ஆண்டு காலமாக விளையாடி வந்த தனது உள்நாட்டு அணியான மும்பையை விட்டு கோவா அணிக்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியானது.
இது உள்நாட்டு கிரிக்கெட் சார்ந்த செய்தி தான் என்றாலும், இதன் பின்னணியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றும் சொல்லப்படுகிறது. இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான அணியாக இருக்கிறது மும்பை அணி. அந்த அணியில் இருந்து தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு வீரர்களும் விளையாடி உள்ளனர்.

தற்போது மும்பை மாநில அணியின் கேப்டனாக இருப்பவர் அஜின்கியா ரஹானே. இந்திய அணிக்காகவும் விளையாடி இருக்கும் மூத்த வீரரான அவருடன் ஜெய்ஸ்வால் மோதலில் ஈடுபட்டதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
2024-25 ரஞ்சி டிராபி தொடரின் போது ஜெய்ஸ்வால் சரியாக விளையாடவில்லை என்பதால் மும்பை அணியின் கேப்டன் ரஹானே மற்றும் பயிற்சியாளர் ஓம்கார் சல்வி அவரிடம் அது குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அப்போது ஜெய்ஸ்வால் கோபமாக நடந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் சுற்றில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணி தோல்வி அடைந்திருந்தது. அந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தார். அந்தப் போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 120 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 290 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆகி 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்து இருந்தது.
அந்தப் போட்டியின் முடிவில் கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் பயிற்சியாளர் ஓம்கார் சல்வி ஜெய்ஸ்வாலிடம் அர்ப்பணிப்புடன் விளையாடவில்லை என விமர்சனம் செய்ததாகவும், அப்போது கோபமடைந்த ஜெய்ஸ்வால் அஜிங்கியா ரஹானேவின் கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய பையை எட்டி மிதித்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், அந்தப் போட்டியின் முடிவில் மும்பை தேர்வு குழு தலைவர் சஞ்சய் பாட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், "இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் மும்பை அணியில் அதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். அது இந்த போட்டியில் நடைபெறவில்லை. அவர்கள் மும்பை அணிக்காக நாங்கள் விளையாடுகிறோம் என்று மட்டும் நினைக்கிறார்கள். ஆனால், நூறு சதவீதம் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியை வெற்றி பெற வைக்கவில்லை" என விமர்சித்து இருந்தார்.
அவர் பெயர் சொல்லாவிட்டாலும் ஜெய்ஸ்வாலை தான் விமர்சித்து இருந்தார். இது போன்ற காரணங்களால் தான் ஜெய்ஸ்வால் தற்போது மும்பை அணியை விட்டு கோவா அணிக்கு இடம் பெயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. கோவா மாநில அணி ஜெய்ஸ்வாலை தங்கள் அணியின் கேப்டனாகவும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பதவிக்காக ஜெய்ஸ்வால் கோவா சென்றார் என சொல்வதையும் நம்ப முடியாது. ஏனெனில், ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக விளையாடும் நிலையில் அவரால் கோவா அணிக்காக முழுநேர கேப்டனாக செயல்பட முடியாது. எனவே, கேப்டன் பதவி என்பது அவருக்கு அளிக்கப்பட்ட ஒரு கௌரவம் மட்டுமே. மும்பை மாநில அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் ஜெய்ஸ்வால் வெளியேறி இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.