ஜெய்ஸ்வால் செய்த சொதப்பல்.. பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு போட்டியாக டக் அவுட் ஆவதில் சாதனை
காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட்டாகி ஏமாற்றமளித்தார். காலே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ வீசிய முதல் ஓவரின் 3-வது பந்திலேயே ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்தார்.
பந்தை கட் ஷாட் ஆட முயன்ற ஜெய்ஸ்வால், கால்களைச் சரியாக நகர்த்தாமல் விளையாடினார். இதனால் பேட்டின் விளிம்பில் பட்ட பந்தை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா வலதுபுறமாக டைவ் அடித்து அபாரமாக கேட்ச் பிடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் தனது 7-வது டக்-அவுட்டைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2024 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட்டான பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஜெய்ஸ்வால் முதலிடத்தைப் பிடித்து படுமோசமான சாதனையைப் படைத்துள்ளார். இக்காலகட்டத்தில் அவரை விட பந்துவீச்சாளர்கள் மட்டுமே அதிக முறை டக்-அவுட்டாகி உள்ளனர்.
2024 முதல் டெஸ்டில் அதிக முறை டக்-அவுட்டான வீரர்கள் பட்டியல்:
- ஜஸ்பிரித் பும்ரா - 12 முறை
- ஜெய்டன் சீல்ஸ் - 10 முறை
- முகமது சிராஜ் - 9 முறை
- அசிதா பெர்னாண்டோ - 8 முறை
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 7 முறை
மிகக் குறுகிய காலத்தில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக உருவெடுத்த ஜெய்ஸ்வால், இவ்வாறு அடிக்கடி டக்-அவுட்டாவது இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167 ரன்களும், கே.எல். ராகுல் 82 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணியில் சோனல் தினுஷா 100 ரன்களும், டிக்வெல்லா 80 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 178 ரன்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
