கப் உடைந்தும் அலட்சியம் காட்டிய சாதனை நாயகன்
Recommended Video
டெல்லி : தென்னாப்பிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த அன்டர் 19 உலக கோப்பை தொடரில் 400 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை யஷஸ்வி ஜெய்ஸ்வால் கைப்பற்றினார்.
இந்நிலையில் அவர் வாங்கிய தொடர் நாயகன் கோப்பை இரண்டாக உடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி அவர் முன்னேறி வருவதாக அவருடைய பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
தன்னைப் பற்றிய மற்றவர்களின் கருத்து குறித்து கவலை கொள்ளாமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருவதாகவும், தன்னுடைய கடின உழைப்பை இரட்டிப்பாக்கி உள்ளதாகவும் ஜெய்ஸ்வால் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

சிறப்பாக விளையாடிய யஷஸ்வி
தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள அன்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்தியாவின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 400 ரன்களை குவித்தார். ஒரு போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் எல்லாம் அரைசதமாவது அடித்திருந்தார். 88, 105*, 62, 57*, 29*, 59 என்று அவருடைய ரன்கள் இருந்தது.

தடைகளை தாண்டிய யஷஸ்வி
மும்பையில் சாலையோரத்தில் பானிப்பூரி விற்றுக்கொண்டு தன்னுடைய சாதனையை நோக்கிய பயணத்தை எதிர்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், தன்னுடைய ஒருமுக பார்வையால், சிறிது சிறிதாக முன்னேறி, விஜய் ஹசாரே கோப்பையில் கவனத்தை பெற்று அதையடுத்து தொடர்ந்து அன்டர் 19 உலக கோப்பையிலும் கவனத்தை பெற்றுள்ளார்.

தொடர் நாயகன் விருது
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அன்டர் 19 உலக கோப்பை தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் பெற்றிருந்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியுற்ற போதிலும் 400 ரன்களை அடித்திருந்த யஷஸ்விக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது.

கவலைக் கொள்ளாத யஷஸ்வி
இந்நிலையில் தொடரில் சிறப்பாக விளையாடி யஷஸ்வி ஜெய்ஸ்வால் வாங்கிய தொடர் நாயகன் கோப்பை இரண்டாக உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் விரும்பும்வகையில் அமைந்திருந்த அந்த கோப்பை எப்படி உடைந்தது என்பதை கூட யோசிக்காமல் உள்ளார் ஜெய்ஸ்வால். மேலும் அவர் அதுகுறித்து கவலையும் படவில்லை.

"கோப்பை குறித்து கவலைப்படுவதில்லை"
இந்நிலையில், இது முதல் முறையல்ல என்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எப்போதும் தான் அடிக்கும் ரன்கள் குறித்தே கவலை கொள்வார் என்றும் தனக்கு கிடைக்கும் கோப்பைகள் குறித்து கவலைகொள்ள மாட்டார் என்றும் அவருடைய பயிற்சியாளர் ஜூவாலா சிங் தெரிவித்துள்ளார். தற்போது அடுத்த கட்டம் குறித்தே அவரது சிந்தனை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்ஸ்வால் கருத்து
தற்போது அன்டர் 19 உலக கோப்பையில் பங்கேற்றுள்ள தான், அடுத்ததாக இந்திய அணி பங்கேற்கும் உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்றும் அதற்காக தான் தன்னுடைய உழைப்பை இருமடங்காக ஆக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை குறித்த மற்றவர்களின் சிந்தனை பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் தன்னை பற்றி மட்டுமே கவலைகொண்டு தான் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னுடனேயே போட்டி
தான் உலகத்துடன் போட்டியிடவில்லை என்றும் தன்னுடனேயே தனது போட்டி இருப்பதாகவும் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இதற்கென அதிகமாக குளிர்ந்த பானங்களை அருந்துவது, அதிகமாக சர்க்கரையை சாப்பிடுவது போன்ற தனது பழக்கங்களை மாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெற்றியை நோக்கிய தனது பயணத்தில் உடலை உறுதி செய்வதற்காக மெடிடேஷன் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications