மும்பை: நவம்பர் மாத இறுதியில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா பயணிக்கிறது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்று ஆஸ்திரேலியா 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. தொடர்ச்சியாக 2 முறை சொந்த மண்ணிலேயே தோல்வியடைந்திருப்பதால், ஆஸ்திரேலியா வீரர்கள் அவமானமாகவே கருதி வருகின்றனர்.
அதிலும் கடந்த முறை ஆஸ்திரேலியாவின் கோட்டையான காபாவில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இதனால் இந்திய அணியை பழிதீர்க்க ஆஸ்திரேலியா வீரர்கள் தீவிரமாக உள்ளனர். அதற்கேற்றபடி பார்டர் - கவாஸ்கர் தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் வார்த்தை விளையாட்டுகளை தொடங்கிவிட்டனர்.

ஏற்கனவே பேட் கம்மின்ஸ் 8 வார ஓய்வுக்கு செல்வதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகி வருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் நேதன் லயன் பேசுகையில், கடந்த முறை காபா டெஸ்ட் போட்டியில் இந்திய பி அணி விளையாடியதாக பலரும் கூறுகின்றனர். சில நேரங்களில் அவர்களாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
இம்முறை இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி அதிக பேச்சுகள் வருகின்றன. இதுவரை அவருடன் விளையாடவில்லை. நிச்சயம் அது எங்கள் அணியின் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியதை கவனமாக பார்த்தேன்.
நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான். அதேபோல் இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லியுடன் சில ஆலோசனை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு ஸ்டைல் மற்றும் திட்டத்தை பின்பற்றியது சுவாரஸ்யமாக இருந்தது. எப்போதும் கிரிக்கெட்டை பற்றி ஆலோசிக்கவும், பேசவும் விரும்புவேன்.
அதில் டெஸ்ட் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடும் வீரர்களுடன் ஆலோசிக்கும் போது, அவர்களிடம் இருந்து எனக்கு தெரியாத சில விஷயங்கள் கிடைக்கும். கிரிக்கெட்டை பற்றி ஏராளமான தகவல் பலரிடமும் உள்ளது. அதனை நாம் கண்டறிந்து ஆட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.