மும்பை: இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது 2025 ஆசிய கோப்பை தொடருக்கான அணித் தேர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ரன் மழை பொழிந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடமில்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 2 சதங்களுடன் 411 ரன்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். டெஸ்ட் போட்டிகளில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜெய்ஸ்வால், ஆசிய கோப்பைக்கான டி20 அணியிலும் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

2025 ஐபிஎல் சீசனிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் 559 ரன்களை விளாசியிருந்தார். சர்வதேச டி20 போட்டிகளிலும் அவரது செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. ஆனால், பிசிசிஐ தேர்வுக்குழு வேறு விதமாக சிந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெய்ஸ்வாலை டெஸ்ட் கிரிக்கெட்டில், அதாவது சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்துமாறு தேர்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பைக்கான டி20 அணியில் இருந்து அவர் ஒதுக்கப்படலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக, சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் தொடக்க ஜோடியைத் தொடர அணி நிர்வாகம் விரும்புவதே இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய காம்பினேஷனுக்கு வாய்ப்பளிக்க தேர்வுக்குழுவினர் முடிவு செய்துள்ளதால், ஜெய்ஸ்வால் மட்டுமல்லாது, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கே அணியில் இடம் கிடைப்பது சந்தேகமாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருபுறம் உச்சத்தில் இருக்கும் ஜெய்ஸ்வாலை, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்குவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஒரு வீரரை ஒரு குறிப்பிட்ட ஃபார்மெட்டிற்கு மட்டும் முத்திரை குத்துவது அவரது வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எது எப்படியோ, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு, ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி மும்பையில் தேர்வு செய்ய உள்ளது. அன்றைய தினம் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் குறித்த இந்த அனைத்து கேள்விகளுக்கும் அதிகாரப்பூர்வமாக விடை தெரிந்துவிடும்.