லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. "இந்தியாவில் இருந்து வரப் போகும் அடுத்த டான் பிராட்மேன்" என்று வர்ணிக்கப்பட்ட இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மேகமூட்டமான சூழ்நிலையைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள், இந்திய துவக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, இங்கிலாந்து பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் வீசிய பந்தில் ஜெய்ஸ்வால் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடர் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிய ஜெய்ஸ்வாலுக்கு, இந்த விக்கெட் மேலும் பின்னடைவாக அமைந்தது. இந்திய அணி 10 ரன்களை எடுத்து முதல் விக்கெட்டை இழந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இரட்டைச் சதங்களை விளாசி, ஜாம்பவான் டான் பிராட்மேன் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோருக்குப் பிறகு, இளம் வயதில் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.
ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (12) அடித்த வாசிம் அக்ரம்மின் உலக சாதனையையும் சமன் செய்தார். மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுனில் கவாஸ்கர்க்குப் பிறகு ஜெய்ஸ்வால் பெற்றார். அதனால் இந்தியாவின் டான் பிராட்மேனாக ஜெய்ஸ்வால் மாறுவார் என்ற பாராட்டுக்கள் அவருக்கு கிடைத்தன.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த ஜெய்ஸ்வால், இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தனது சராசரி ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார். இந்தத் தொடரில் இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்திருந்தாலும், அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பெரிய ஸ்கோர் இதுவரை கிடைக்கவில்லை.
குறிப்பாக, கடந்த மான்செஸ்டர் டெஸ்டின் (4வது டெஸ்ட்) இரண்டாவது இன்னிங்ஸில் அவர் டக் அவுட் ஆனார். தொடர்ந்து நீண்ட நேரம் ஃபீல்டிங் செய்ததால் ஏற்பட்ட உடல் மற்றும் மனச் சோர்வு அவரது ஆட்டத்தைப் பாதித்திருக்கலாம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது கடைசி டெஸ்டிலும் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்திருப்பது, அவரது ஃபார்ம் குறித்த கவலையை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தொடரைச் சமன் செய்ய இந்திய அணி போராடி வரும் நிலையில், முக்கிய வீரரான ஜெய்ஸ்வாலின் இந்தச் சொற்ப ரன் ஆட்டம் அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.