ஹாங்சோ : யுவராஜ் சிங்கின் 16 ஆண்டு சாதனையை முந்தைய போட்டியில் முறியடித்து இருந்தார் நேபாள வீரர் தீபேந்திரா சிங்.
அதற்கு பழி தீர்க்கும் வகையில் நேபாள அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து சிதற விட்டார் இந்திய அணி துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.

நேபாள அணியே கத்துக்குட்டி அணிதான். ஆனாலும், அந்த அணியை விட கிரிக்கெட் அனுபவம் இல்லாத ஒரு அணியான மங்கோலியாவுக்கு எதிராக பல சாதனைகளை உடைத்து இருந்தது.
அதில் யுவராஜ் சிங்கின் 16 ஆண்டு கால சாதனை ஒன்றையும் உடைத்தார் நேபாள அணி வீரர் தீபேந்திரா சிங். குரூப் சுற்றில் நேபாள அணி, மங்கோலியாவை சந்தித்தது. அந்தப் போட்டியில் நேபாள அணியின் குஷால் மல்லா 50 பந்துகளில் 137 ரன்கள் குவித்து ரோஹித் சர்மாவின் அதிவேக டி20 சதம் அடித்த சாதனையை உடைத்தார்.
தீபேந்திரா சிங் 9 பந்துகளில் அரைசதம் கடந்து டி20 போட்டிகளில் அதிவேகத்தில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார். முன்பு 2007 டி20 உலகக்கோப்பை தொடரின் போது யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் என்ற சாதனையை தனதாக்கினார். அந்த போட்டியில் தான் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து கிரிக்கெட் உலகை மிரட்டிய சம்பவமும் நடந்தது.
சுமார் 16 ஆண்டுகளாக யுவராஜ் சிங்கின் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. ஆனால், நேபாள அணி கிரிக்கெட் பற்றியே தெரியாத மங்கோலியாவை வைத்து அந்த சாதனையை உடைத்து விட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த டி20 தொடர் சர்வதேச அங்கீகாரம் பெற்று இருப்பதே இந்த சாதனை சர்வதேச போட்டிகளின் கீழ் வர முக்கிய காரணம். எது எப்படியோ, யுவராஜ் சிங்கின் சாதனை உடைந்து விட்டது.
இந்த நிலையில், ஜெய்ஸ்வால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார். அதே சமயம் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததால் தன் விக்கெட்டையும் விழாமல் பார்த்துக் கொண்டு சதம் அடித்தார். 48 பந்துகளில் தன் முதல் சர்வதேச டி20 போட்டி சதம் அடித்து அசத்தினார் ஜெய்ஸ்வால்.
மேலும், இளம் வயதில் டி20 போட்டி சதம் அடித்த இந்திய வீரர் பட்டியலில் சுப்மன் கில்லை முந்தி முதல் இடத்தை பிடித்தார் ஜெய்ஸ்வால். இவரது ஆட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருப்பதே கடினம் தான். 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.
இந்தியா இந்தப் போட்டியில் 202 ரன்கள் எடுத்தது. நேபாள அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.