மும்பை: சி கே நாயுடு அண்டர் 23 கோப்பை தொடரில் ஹரியானா அணியில் இடம் பெற்று ஆடிய யாஷ்வர்தன் தலால் 426 ரன்கள் குவித்து பிரம்மாண்ட சாதனையை படைத்து இருக்கிறார். சி கே நாயுடு தொடரில் அதிக ரன் குவித்த வீரராக அவர் சாதனை படைத்து இருக்கிறார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவர் 463 பந்துகளில் 426 ரன்கள் எடுத்து இருக்கிறார். 46 ஃபோர் மற்றும் 12 சிக்ஸ் அடித்து மிரட்டி இருக்கிறார். இதை அடுத்து ஹரியானா அணியின் ஸ்கோர் 732 ரன்களுக்கு 8 விக்கெட் என்பதாக உள்ளது. 92 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ரன் குவித்து இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

463 பந்துகளுக்கு களத்தில் நின்ற பின்னரும் அதே ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடி வருகிறார். யாஷ்வர்தன் தலால் தான் சந்தித்த 463 பந்துகளில் 157 சிங்கிள் ரன்களையும், 46 ஃபோர் மற்றும் 12 சிக்ஸர்களையும் அடித்து இருக்கிறார். இதில் 242 டாட் பால்களை ஆடி இருக்கிறார். அவர் எடுத்து இருக்கும் 426 ரன்களில் 60.09 சதவீத ரன்கள் பவுண்டரி மூலம் மட்டுமே கிடைத்து இருக்கிறது.
மேலும், முதல் விக்கெட்டுக்கு அர்ஷ் ரங்கா உடன் இணைந்து 410 ரன்களுக்கு கூட்டணி அமைத்தார். இவர்கள் இருவரும் இணைந்து 98 ஓவர்களில் 410 ரன்கள் சேர்த்தனர். ரங்கா 311 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த பின் வந்த வீரர்கள் ஓரளவு ரன் சேர்த்தாலும் யாரும் அரை சதத்தை தாண்டவில்லை.
இரண்டு நாட்களில் ஹரியானா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 732 ரன்கள் எடுத்து இருக்கிறது. யாஷ்வர்தன் தலால் 426 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார். அவர் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 500 ரன்களை எட்டுவாரா? அல்லது ஹரியான டிக்ளர் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
யாஷ்வர்தன் விக்கெட்டை வீழ்த்த வேண்டி மும்பை அணி 9 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சி கே நாயுடு தொடரில் சமீர் ரிஸ்வி 312 ரன்கள் எடுத்து இருந்தது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை யாஷ்வர்தன் தலால் முறியடித்து இருக்கிறார்.