துபாய்: 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் பவுலர் ஒருவர் ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து மண்ணை கவ்வ முக்கிய காரணமாக இருந்த யாசிர் ஷா.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி கடந்த 14ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 339 ரன்களும், இங்கிலாந்து 272 ரன்களும் எடுத்தன.

பின்னர் 67 ரன்களுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. 283 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இங்கிலாந்து அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்து 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அபாரமாக பந்து வீசிய யாசிர் ஷா 141 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த 10 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் 13 டெஸ்ட் போட்டிகளில் யாசிர் 86 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. இதில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் யாசிர் ஷா முதலிடம் பிடித்துள்ளார். 1996ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 1996ம் ஆண்டு லெக்-ஸ்பின்னர் முஷ்தாக் அஹமது முதலிடம் பிடித்திருந்தார். அதன்பிறகு எந்த பாக். பவுலரும் அந்த இடத்தை அலங்கரிக்கவில்லை. அதேநேரம், தற்போது பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருவதும் அவர்தான் என்பது இதில் சுவாரசிய தகவல்.
இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக டெஸ்ட் போட்டி தரவரிசையில் 4வது இடத்தில் இருந்தார் யாசிர் அகமது. இங்கிலாந்து வீரர் ஆன்டர்சன் முதலிடத்தில் இருந்தார். ஆனால், ஆன்டர்சனுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.
இப்பட்டியலில் 2வது இடத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார். ஆன்டர்சன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 4வது முதல் 6வது வரையிலான இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர்.