குல்தீப் யாதவ் வளர்ச்சி
அஸ்வின், ஜடேஜா சுழற் பந்துவீச்சாளர்கள் கூட்டணிக்கு மாற்றாக வந்த இருவரில் ஒருவர் தான் குல்தீப் யாதவ். 2018ஆம் ஆண்டில் இவரது ரிஸ்ட் ஸ்பின் உலகம் முழுவதும் இருந்த சிறந்த பேட்ஸ்மேன்களையும் திணற வைத்து வந்தது.
குல்தீப் - சாஹல் கூட்டணி
இவருடன் மற்றொரு இளம் சுழற் பந்துவீச்சாளர் சாஹல் இணைந்து பந்துவீசினால் அன்று விக்கெட் வேட்டை உறுதி என்ற நிலை இருந்தது. இவர்களை "குல்ச்சா" என செல்லமாகவும் அழைத்து வந்தனர்.
விக்கெட் வேட்டை
குல்தீப் யாதவ் 53 ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்களும், 19 டி20 போட்டிகளில் 37 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். இவரால் இந்தியா வென்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் எண்ணிக்கை அதிகம்.
2019 ஐபிஎல் தொடர்
இப்படி வெற்றி நடை போட்டு வந்த நிலையில் குல்தீப் யாதவ், 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். அந்த தொடரில் அவரால் ரன் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.
அந்த போட்டி
அந்த தொடரில் விக்கெட் வீழ்த்தவும் திணறி வந்தார். 9 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். குறிப்பிட்ட போட்டி ஒன்றில் தன் பந்துவீச்சை மொயீன் அலி சிதற அடித்ததை கண்டு, மனம் உடைந்து அழுதே விட்டார்.
மொயீன் அலி அதிரடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் குல்தீப் பந்துவீசி வந்தார். அப்போது மொயீன் அலி குல்தீப் யாதவ் வீசிய ஒரு ஓவரை குறி வைத்து தாக்கினார். அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் குவித்தார்.
மோசமான பந்துவீச்சு
4 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்த குல்தீப் யாதவ் களத்திலேயே உடைந்து போனார். அவர் கண்ணீர் விட்ட காட்சிகள் ரசிகர்கள் இடையே பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பந்துவீச்சு தான் ஐபிஎல் தொடரில் ஒரு சுழற் பந்துவீச்சாளரின் மோசமான பந்துவீச்சு ஆகும்.
உலகக்கோப்பை தொடர்
அதன் பின் உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்பட்ட குல்தீப் யாதவ், பழைய கம்பீரத்தை இழந்தார். பந்துவீச்சில் தடுமாறி வந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்களை வாரி இறைத்தார். அது இந்திய அணி நிர்வாகம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்தது.
அல்லாடும் குல்தீப்
உலகக்கோப்பை தொடருக்குப் பின் டி20 அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. டி20 போட்டிகளில் தரவரிசையில் முன்னணி இடத்தில் இருந்த குல்தீப் யாதவ், அணியில் தன் இடத்தை இழந்தார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் அவர் இடம் பெற்றார். எனினும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆப்பு வைத்த ஐபிஎல்
ஐபிஎல் தொடர் மூலம் அடையாளம் காணப்பட்ட வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால், சிறந்த பந்துவீச்சாளராக வளர்ந்து வந்த குல்தீப் யாதவ்வுக்கு மொத்தமாக ஆப்பு வைத்தது ஐபிஎல்.