
ஹர்திக் பண்டியா சர்ச்சை
ஆண்டு துவக்கத்தில் ஹர்திக் பண்டியா தான் பங்கேற்ற காபி வித் கரன் நிகழ்ச்சியில் பல பெண்களுடன் பழகுவதை பற்றியும், தன் வாழ்க்கை முறை பற்றியும் பேசிய கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை கிளப்பியது.

தடையும், மன்னிப்பும்
பண்டியாவுடன் பேட்டி அளித்த கேஎல் ராகுலும் இதில் சிக்கினார். அவர்கள் இருவரையும் விசாரணை நடத்தும் வரை தடை செய்தது பிசிசிஐ. இருவரும் சில வாரங்கள் தடையில் இருந்தனர். பின் மன்னிப்புக் கோரி மீண்டும் அணிக்கு திரும்பினர்.

அஸ்வின் ரன் அவுட்
அடுத்து 2019 ஐபிஎல் தொடரில் பெரும் பரபரப்பை கிளப்பினார் அஸ்வின். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பந்து வீச ஓடி வரும் போது கிரீஸை விட்டு முன்னேறிய ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.

இங்கிலாந்து கோபம்
இது விதிப்படி சரி தான் என்றாலும், அஸ்வின் கிரிக்கெட்டின் நெறிப்படி நடந்து கொள்ளவில்லை. அவர் பேட்ஸ்மேனை எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்தது. ஜோஸ் பட்லர் இங்கிலாந்து வீரர் என்பதால் இங்கிலாந்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அஸ்வினுக்கு எதிராக பொங்கி எழுந்தனர்.

கிரிக்கெட் உலகம் விவாதம்
ஓய்வு பெற்ற அம்பயர் சைமன் டாபல் அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இது குறித்து கிரிக்கெட் விதியை நிர்ணயிக்கும் மேரில்போர்ன் கிரிக்கெட் கிளப் கூட குழப்பத்துக்கு உள்ளானது. முதலில் அஸ்வின் செய்தது சரி என்று கூறிய அந்த கிளப், பின் அஸ்வின் எச்சரித்து இருக்க வேண்டும் என்றது.

தோனி கிளவுஸ்
அடுத்து 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் தோனி பயன்படுத்திய கிளவுஸ் விவகாரம் இந்திய ரசிகர்களை உசுப்பேற்றி விட்டது. தோனி பயன்படுத்திய கிளவுஸில் இந்திய இராணுவ பட்டாலியன் ஒன்றின் முத்திரை இருந்தது.

கிளவுஸை மாற்றிய தோனி
அதை நீக்க வேண்டும் என்றது ஐசிசி. இந்திய ரசிகர்கள் தோனி அதை நீக்கக் கூடாது என இரண்டு - மூன்று நாட்களுக்கும் மேலாக இணையத்தில் போராட்டம் நடத்தினர். பின் தோனி அந்த கிளவுஸை அணியவில்லை. அத்துடன் சர்ச்சை முடிவுக்கு வந்தது. அந்த இரண்டு - மூன்று நாட்களும் இணையத்தில் போர் தொடுத்த யாரும் அடுத்த நாள் முதல் அதை மறந்து விட்டது தான் இதில் வேடிக்கையான விஷயம்.

உலகக்கோப்பை இறுதி சர்ச்சை
அதே 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டி பெரும் சர்ச்சை ஆனது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையே நடந்த அந்தப் போட்டியில் முதலில் 50 ஓவர் முடிவில் போட்டி டை ஆனது. அடுத்து நடந்த சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆனது. வெற்றியாளரை பவுண்டரி எண்ணிக்கைகளை வைத்து தீர்மானித்தனர். அதன்படி இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஆனால், சிறப்பாக ஆடிய நியூசிலாந்து அணி அதிர்ச்சி அடைந்தது.

அம்பயர் செய்த தவறு
பவுண்டரி விதியை நீக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வந்த நிலையில், போட்டியில் கடைசி ஓவரில் அம்பயர் ஒரு ஓவர்த்ரோவுக்கு 4 ரன்கள் கொடுத்தார். அதே பந்தில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரன் ஓடியதற்கு ஒரு ரன் கிடைத்தது. ஆனால், அந்த ரன் கொடுக்கப்பட்டு இருக்கக் கூடாது. அம்பயர் தவறால் தான் இங்கிலாந்து அந்த கூடுதல் ரன்னை பெற்று போட்டியை டிரா செய்ய முடிந்தது. இதுவும் சர்ச்சை ஆகி பின் அடங்கியது.

ப்ரித்வி ஷா தடை
இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா தான் அறிமுகம் ஆன முதல் டெஸ்டில் சதம் அடித்து அட்டகாசம் செய்தவர். அவரது எதிர்காலம் பற்றி அனைவரும் பெரிய கனவு கண்டு வந்த போது, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்பட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அவரது ஊக்கமருந்து பரிசோதனையில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தன. ஒரு வழியாக தடை முடிந்து தற்போது உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார் ப்ரித்வி ஷா.


Click it and Unblock the Notifications











