மும்பை: நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த 3 பேட்ஸ்மேன்களை பற்றி பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்போதும் நட்சத்திர வீரர்கள் தான் உச்சத்தில் இருப்பார்கள். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா 13 போட்டிகளில் விளையாடி 6 சதம், 6 அரைசதம் உட்பட 1,210 ரன்களையும் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் 29 போட்டிகளில் விளையாடி 1,584 ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 27 போட்டிகளில் விளையாடி 1,277 ரன்களையும் விளாசி 2வது இடத்திலும், ரோகித் சர்மா 27 போட்டிகளில் விளையாடி 1255 ரன்களை விளாசி 3வது இடத்தில் இருக்கிறார்.
அதேபோல் நடப்பாண்டில் இளம் வீரர்கள் பலரும் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அந்த வகையில் வங்கதேச அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹிருடாய் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே 92 ரன்களை விளாசிய அவர், ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 82 ரன்களையும் சேர்த்தார்.
இந்திய அணிக்கு எதிராக 54 ரன்களையும் சேர்த்து வெற்றிபெற வைத்தார். உலகக்கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான அரைசதத்தை விளாசினார். நடப்பாண்டில் மட்டும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 727 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் வங்கதேச கிரிக்கெட்டில் அடுத்த நட்சத்திரமாக ஹிருடாய் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்திய அணிக்காக ஆடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் மூலமாக அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே 171 ரன்களை விளாசிய ஜெய்ஸ்வால், ஆசிய டி20 போட்டிகளில் நேபாள் அணிக்கு எதிரான 49 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் 41 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். அதிகளவிலான போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக ஜெய்ஸ்வால் இருப்பார் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார்.
அதேபோல் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா தான் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ப்ரைஸ். உலகக்கோப்பை தொடரில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 சதங்கள் உட்பட 578 ரன்களை விளாசினார். சிறிய வயதிலேயே இங்கிலாந்து, இந்தியா மைதானங்களில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், நியூசிலாந்து அணியின் நிரந்தர தொடக்க வீரர்களில் ஒருவராக அடுத்த ஆண்டில் நிச்சயம் உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.