சென்னை: சர்வதேச கிரிக்கெட் முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரை நடைபெற்ற டாப் 3 சர்ச்சைகள் குறித்து அறியலாம்.
நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணியே மீண்டும் செலுத்தியது என்று நிச்சயமாக சொல்லலாம். ஏனென்றால் ஆஷஸ் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், உலகக்கோப்பை தொடர் என்று அத்தனை முக்கிய கோப்பைகளையும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியே கைப்பற்றியது.

இதனிடையே 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகையே பல்வேறு சர்ச்சைகள், மோதல்கள் உலுக்கியது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு உச்சக்கட்ட சர்ச்சையாக விராட் கோலி - கவுதம் கம்பீர் இருவரும் மோதிக் கொண்டது தான் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. லக்னோ மைதானத்தில் கம்பீர் கொடுத்த சேட்டையை பொறுக்க முடியாமல் கம்பீர் எகிற, அதற்கு உதவியாக நவீன் உல் ஹக் மற்றும் மைக் மேயர்ஸ் இருவரும் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த மோதல் ஐபிஎல் தொடருடன் நிற்காமல், சர்வதேச போட்டிகளிலும் தொடர்ந்தது. இறுதியாக உலகக்கோப்பையின் போது விராட் கோலியே நவீன் உல் ஹக்கை அழைத்து நட்பு பாராட்டி சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை உச்சக்கட்ட மோதலாகவும், சரச்சையாகவும் விராட் கோலி - நவீன் உல் ஹக் மோதல் அமைந்தது.
அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டை உலுக்கிய மற்றொரு சர்ச்சை என்றால் பேர்ஸ்டோவை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்தது தான். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ஓவர் முடிந்தவுடன் பந்தை கூட திரும்பி பார்க்காமல் க்ரீஸில் இருந்து வெளியேற, உடனடியாக அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்தார். இது ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டுக்கு எதிரானது என்று இங்கிலாந்து கைகளை உயர்த்தியது.
அதன்பின் அலெக்ஸ் கேரி முடி வெட்டியதற்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறி இங்கிலாந்து ரசிகர்களும், மீடியாக்களும் அலெக்ஸ் கேரியை ஒருவழி செய்துவிட்டனர். அதிலிருந்து மீண்டு வர முடியாமல் அலெக்ஸ் கேரி தவித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடரில் மோதல் இருக்கும் என்றாலும், இங்கிலாந்து வீரர்கள் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை ரசிகர்களுக்கு புரிய வைக்கும் சர்ச்சையாக இது அமைந்தது.
அதேபோல் உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நடந்த சர்ச்சை தான் கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்தது. இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய தாமதமாக வந்ததாக டைம் அவுட் முறையில் நடுவர்களால் அவுட் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டார். இதன் மூலம் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட்டான முதல் வீரராக மேத்யூஸ் அமைந்தார். இதன்பின் ஷகிப் அல் ஹசன் மீது கற்களை எறிவோம் என்று மேத்யூஸின் தம்பி மிரட்டியது உலகக்கோப்பை தொடரின் உச்சக்கட்ட சர்ச்சையாக அமைந்தது.