மும்பை: 2024 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான வீரர்களில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரல் அறியப்படுகிறார். அவர் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார்.
அந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய துருவ் ஜுரல் நான்கு இன்னிங்ஸ்களில் 190 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அந்த தொடரில் அவர் சிறப்பாக ரன் குவித்தார் துருவ் ஜுரல். ஒரு இன்னிங்ஸில் 90 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார்.

ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் தனது அறிமுக இன்னிங்ஸில் இந்திய அணி சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது 46 ரன்கள் சேர்த்து விக்கெட் வீழ்ச்சியிலிருந்து அணியை மீட்டார். அதற்கு அடுத்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அதன் பின் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியதால் வங்கதேச டெஸ்ட் தொடரிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் துருவ் ஜுரல் தனது வாய்ப்பை இழந்திருந்தார். பின்னர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் பயிற்சிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்த அவர் முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஆனாலும், அங்கு நடந்த பயிற்சி போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சிப் போட்டியில் திணறிய நிலையில், துருவ் ஜுரல் அபாரமாக ஆடி 80 மற்றும் 68 ரன்கள் எடுத்து இருந்தார். இதன் மூலம், துருவ் ஜுரலுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்ற கருத்து முன்னாள் வீரர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அவர் டெஸ்ட் போட்டிகளில் மேலும் வாய்ப்புகளை பெரும் பட்சத்தில் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக வரவும் வாய்ப்பு உள்ளது.