மும்பை: 2024 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவால் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். அவர் இந்த ஆண்டின் துவக்கத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட இந்திய வீரராக இருந்தார். ஆனால், ஆண்டின் மத்தியில் அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட வீரராக மாறினார்.
அடுத்த இந்திய டி20 அணியின் கேப்டன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை இழந்தார். மறுபுறம் தனிப்பட்ட வாழ்விலும் சோகத்தை சந்தித்தார். இப்படி 2024 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரே நேரத்தில் மிக மோசமான ஆண்டாகவும், 2024 டி20 உலகக் கோப்பையின் காரணமாக சிறப்பான ஆண்டாகவும் அமைந்தது.

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் அவர் பலராலும் வெறுக்கப்பட முக்கிய காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி தான்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியை ஏற்றார். அதனால் பெரும்பாலான ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக விமர்சனத்தை முன் வைத்து வந்தனர். இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதன்முறையாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது.
ஆனால், அடுத்து நடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அந்தத் தொடரில் அவர் எட்டு போட்டிகளில் 144 ரன்கள் எடுத்ததோடு, 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன்மூலம் 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்று இருந்தார்.
உலகக் கோப்பை முடிந்த உடன் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு அடுத்ததாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் ஹர்திக் பாண்டியாவும், அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இப்படியாக 2024 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை வென்று இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல மோசமான நிகழ்வுகளையும், ஏமாற்றங்களையும், சோகங்களையும் எதிர்கொண்டார் ஹர்திக் பாண்டியா.