மும்பை: 2024ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சி தோல்விகள், வெளிநாடுகளில் ஆடிய மோசமான ஆட்டங்கள் குறித்து பார்க்கலாம். நடப்பாண்டில் இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் மட்டும் 3 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி பங்கேற்றிருந்தது.
2024ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்தது. ஏனென்றால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை சிறப்பாக வென்று அசத்திய இந்திய அணி, அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது.

இந்த டெஸ்ட் தொடரில் 2வது குழந்தை பிறக்கவிருந்ததால், விராட் கோலி கடைசி நேரத்தில் விலகி கொண்டார். இந்திய அணி 5-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று பார்க்கப்பட்ட போது, ஐதராபாத் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே எதிர்பாராத வகையில் மரண அடி வாங்கியது. இங்கிலாந்து அணி போப் 278 பந்துகளில் 196 ரன்கள் விளாசியது மொத்த ஆட்டத்தையும் மாற்றியது.
இதனால் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 230 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்பின் அடுத்த 4 போட்டிகளிலும் இந்திய அணி எழுச்சியை கண்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்ட நிலையில், இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அப்போது டி20 தொடரை எளிதாக கைப்பற்றினாலும், ஒருநாள் தொடரில் அதிர்ச்சி தோல்வியை பெற்றது. முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. தொடர்ந்து கடைசி போட்டியிலும் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து ஒருநாள் தொடரை இழந்தது.
இதனால் 27 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை இழந்து இந்திய அணி மோசமான சாதனையை படைத்தது. இதற்கெல்லாம் உச்சமாக நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது தான். 12 ஆண்டுகளாக இந்திய அணி பெற்று வந்த வெற்றிகளை, மொத்தமாக நியூசிலாந்து அணி துவம்சம் செய்தது.
பெங்களூர் மண்ணில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் 2வது இன்னிங்ஸில் எழுச்சி பெற்ற போதும், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் புனே மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.
இதன்பின்னர் மும்பையில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதனால் சொந்த மண்ணில் முதல்முறையாக 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து அடிலெய்டு மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.