மும்பை : நம் வாழ்க்கையில் பல கஷ்ட காலங்களை சந்தித்திருப்போம். நமது கஷ்டம் எப்போதுடா தீரும் என்று ஏங்கிக் கொண்டிருப்போம். நமது ஏழ்மையிலிருந்து விடுபட இவ்வளவு உழைக்கின்றோமே. எப்போதுதான் அனைத்தும் மாறும் என்று நினைப்போம். இப்படி பல ஆண்டுகளாக நாம் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாலும் திடீரென்று ஒரு ஆண்டு நமது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றி உச்சத்தைக் கொண்டு சென்று விடும்.
அப்படிப்பட்ட ஒரு ஆண்டு தான் 2024 ஆம் ஆண்டு ஜெய்ஸ்வாலுக்கு அமைந்தது. பானி பூரி விற்று வந்த சிறுவன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்று ஏழ்மையிலிருந்து தப்பித்தார். எனினும் ஏழ்மையிலிருந்து தப்பித்தாலும் நாட்டுக்காக விளையாடி சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியுடன் தொடர்ந்து உழைத்து வந்த ஜெய்ஸ்வாலுக்கு 2023 ஆம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தது.

சரி வாய்ப்பு கிடைத்து விட்டது. அதனை தக்க வைக்க போராடுவது மட்டுமல்லாமல் உலகமே நமது கதையை பார்க்க வேண்டும் என நினைத்தார் ஜெய்ஸ்வால். இந்த சூழலில் தான் ஜெய்வாலுக்கு 2024 ஆம் ஆண்டு மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தது. இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகின்ற ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து இரண்டு இரட்டை சதம் அடித்தார்.
அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே தொடரில் 700 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக ஜெய்ஸ்வால் மாறினார். அது மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெர்த் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் அபார சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதன் மூலம் யாருடா இந்த பையன் என்று ஜெய்ஸ்வாலை அனைவரும் திரும்பி பார்க்க நேரிட்டது. 2024 ஆம் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ஜெய்ஸ்வால் மொத்தமாக 1304 ரன்களை அடித்திருக்கிறார். இதில் இரண்டு இரட்டை சதமும், ஒரு சதமும் அடங்கும். அதிகபட்சமாக 214 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் ஜெய்ஸ்வால் ஏழு அரை சதம் அடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டு 35 சிக்ஸர்களை ஜெய்ஸ்வால் விளாசி இருக்கிறார். இது ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையில் திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் டி20 போட்டிகளிலும் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 293 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும்.
அதுமட்டுமல்லாமல் டி20 உலக கோப்பையில் இடம் பெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். ஜெய்ஸ்வால் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் அவர் உலக சாம்பியன் என பெயரை பெற்றது. இந்த 2024 ஆம் ஆண்டு தான் ஜெய்ஸ்வாலுக்கு இதே போல் பல ஆண்டுகள் அமைய வேண்டும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.