மும்பை: 2025-ம் ஆண்டு முடிவுக்கு வரப்போகிறது. இந்த ஆண்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு பெரிய மேடு, பள்ளமாக அமைந்து இருந்தது. கிரிக்கெட்டில் கோப்பைகளை வென்று குவித்தாலும், மறுபுறம் அரசியல் மோதல்கள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் மைதானத்தில் நடந்த சோகங்கள் என சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. வெற்றிகளைத் தாண்டி, 2025-ல் இந்திய விளையாட்டுத் துறையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஐந்து பெரிய சர்ச்சைகளை இங்கே பார்க்கலாம்.
செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற ஆசியக் கோப்பை குரூப்-ஏ போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. வழக்கமாக வீரர்கள் கை குலுக்கிக் கொள்வது மரபு. ஆனால், இந்த ஆட்டத்தில் டாஸ் போடும்போதும் சரி, போட்டி முடிந்த பிறகும் சரி... இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கைகுலுக்க மறுத்துவிட்டனர். "அரசியல் வேறு, விளையாட்டு வேறு" எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொந்தளித்தது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது.

அதே ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசளிப்பு விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அதிகாரியுமான மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க இந்திய கேப்டன் மறுப்பு தெரிவித்தார். இதனால் கடுப்பான நக்வி, கோப்பையுடன் மேடையை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் பிசிசிஐ தலையிட்ட பிறகே விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.
2025-ம் ஆண்டின் மிக இருண்ட அத்தியாயம் இதுதான். ஜூன் 4-ம் தேதி, ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாட திட்டமிட்டது. அதற்காக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திரண்ட ரசிகர்களிடையே நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். "வெற்றிக் கொண்டாட்டம் மரணத்தில் முடிவதா?" என ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் கண்ணீர் சிந்தியது. இது நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக அமைந்தது.
கால்பந்து உலகிலும் சர்ச்சை வெடித்தது. ஐ-லீக் தொடரில் சர்ச்ஹில் பிரதர்ஸ் அணிக்குக் கோப்பை வழங்கப்பட்டது. ஆனால், புள்ளிகள் குறைக்கப்பட்டதை எதிர்த்து இன்டர் காசி அணி நீதிமன்றம் சென்றது. இறுதியில் அவர்களே சாம்பியன் எனத் தீர்ப்பு வந்தது. சர்ச்ஹில் பிரதர்ஸ் கோப்பையைத் தர மறுக்க, இன்டர் காசி அணிக்கு ஒரு 'போலி கோப்பை' வழங்கப்பட்டது. இது இந்திய கால்பந்து நிர்வாகத்தின் அவலநிலையைக் காட்டியது.
இந்திய கால்பந்தின் முக்கிய தொடரான ஐஎஸ்எல் 2025-26 சீசன், நிர்வாகத்திற்கும் ஒளிபரப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மோதலால் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பல கிளப் அணிகள் நிதி நெருக்கடியில் சிக்கின. இந்திய கால்பந்து வளர்ச்சியில் இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.