மும்பை: கிரிக்கெட் உலகில் இந்தியா, பாகிஸ்தான் மோதினாலே, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. இந்த சூழலில் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலை சந்தித்தது. இந்த கட்டத்தில் தான் 2025ஆம் ஆண்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் பலமுறை கிரிக்கெட் களத்தில் மோதி கொண்டன. 2025 இல் நடந்த மறக்கமுடியாத சில இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி (டிசம்பர்): இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி தொடர் முழுவதும் தோல்வியடையாமல், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டி இளம் இந்திய அணிக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக முடிந்தது. பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சமீம் மின்ஹாஸ் 172 ரன்கள் அடித்து கலக்க, அலி ரஸா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தானை வெற்றி பெறச் செய்தனர்.

ஐசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி (செப்டம்பர்): சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ஆண்கள் அணி, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இது ஒரு விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது. திலக் வர்மா 53 பந்துகளில் நிதானமாக 69 ரன்கள் எடுத்து, 147 ரன்கள் என்ற இலக்கை இந்தியா துரத்திச் செல்ல உதவினார்.
ஐசிசி. சாம்பியன்ஸ் டிராபி குரூப் சுற்று (பிப்ரவரி): இந்தியா மீண்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகனாக ஜொலித்தார். அவர் 111 பந்துகளில் தனது 51வது ஒருநாள் சதம் விளாசி, 241 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்தியா துரத்தி வெல்ல உதவினார். முக்கிய தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலியின் நிலையான ஆதிக்கம் இதில் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது.
ஐசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் (செப்டம்பர்): இந்தப் போட்டியில் அபிஷேக் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் இன்னிங்ஸை முழுமையாகக் கையாண்டனர். இதன்மூலம் பாகிஸ்தான் மீண்டும் திணறடிக்கப்பட்டு, இந்தியா வலுவான வெற்றியைப் பதிவு செய்தது. பாகிஸ்தான் வீரர்களின் சர்ச்சைப் பேச்சுகளால் போட்டி பரபரப்பானது; எனினும், இந்தியா தனது ஆட்டத் திறமையால் அதற்கு பதிலடி கொடுத்தது.
ஐசிசி. ஆண்கள் ஆசியக் கோப்பை குரூப் சுற்று (செப்டம்பர்): இந்தப் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில், 25 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 20 ஓவர்களில் 127 ரன்கள் என்ற சொற்ப இலக்கை நிர்ணயிக்க, இந்தியா அதை 15.5 ஓவர்களிலேயே இலகுவாகத் துரத்தி வென்றது. அபிஷேக் ஷர்மா 31 மற்றும் சூர்யகுமார் யாதவ் 47 ஆகிய ஸ்கோரை குவித்தனர்.