மும்பை: யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், முன்னாள் கேப்டன் கபில் தேவ் குறித்து மோசமாக பேசி இருக்கிறார். கபில் தேவ் ஒரே ஒரு கோப்பை மட்டுமே வென்றவர் என்றும், யுவராஜ் சிங் 13 கோப்பைகள் வென்றவர் என்றும் இருவரையும் ஒப்பிட்டு பேசி இருக்கிறார். இது கிரிக்கெட் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பல முறை தோனி மற்றும் கபில் தேவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி அழித்து விட்டதாக இதற்கு முன்பும் கூறி இருக்கிறார். இப்போதும் ஒரு பேட்டியில் அவர் இதே கருத்தை பேசி இருக்கிறார். .
"தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவர் கண்ணாடி முன் நின்று தன்னை பார்க்க வேண்டும். யுவராஜ் சிங் இன்னும் நான்கு, ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி இருப்பார். ஆனால், தோனியால் யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கை அழிந்து விட்டது." என்றெல்லாம் கூறி இருந்தார். அதே பேட்டியில் கபில் தேவை மோசமான முறையில் பேசி இருக்கிறார். எப்படி யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வை தோனி அழித்து விட்டதாக அவர் நினைக்கிறாரோ, அதேபோல தனது கிரிக்கெட் வாழ்வை கபில் தேவ் அழித்து விட்டதாக யோக்ராஜ் கருதுகிறார்.
1981இல் கபில் தேவ் மற்றும் யோக்ராஜ் சிங் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தனர். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் கபில் தேவ். அந்த சமயத்தில் யோக்ராஜ் சிங் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது கேப்டன் கபில் தேவ் தான் தான் நீக்கப்பட காரணம் என அவர் நினைத்தார். அப்போது முதல் கபில் தேவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

இது குறித்து அவரே ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். யுவராஜ் சிங் பிறந்த போது கபில் தேவை பழிவாங்குவதற்காக இவரை கிரிக்கெட் ஆட வைப்பேன் என அவர் சூளுரைத்ததாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார். தற்போது அளித்த பேட்டியில் கபில் தேவை, யுவராஜ் சிங்குடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
"எங்கள் காலத்தின் மிகச் சிறந்த கேப்டன் கபில் தேவ், நான் அவரிடம் இந்த உலகம் உன்னை தூற்றும் இடத்திற்கு உன்னை கொண்டு செல்வேன் என்று நான் அவரிடம் கூறினேன். இன்று யுவராஜ் சிங் 13 கோப்பைகளை வென்று இருக்கிறார். நீ வெறும் ஒரு கோப்பை மட்டும் வென்று இருக்கிறாய். இத்துடன் இந்த விவாதம் முடிந்தது. இனி இது குறித்து பேச ஒன்றும் இல்லை" என்று யோக்ராஜ் சிங் பேசி இருக்கிறார்.
அவரது பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். தோனி மற்றும் கபில் தேவ் மட்டுமே ஒரு வீரரை அணியை விட்டு நீக்கிவிட முடியாது. யுவராஜ் சிங் இந்திய அணியில் இடம் பெறாமல் போக பல காரணங்களும் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஓய்வு பெற்ற பின்னரும் கபில் தேவ் மற்றும் தோனி குறித்து அவதூறாக பேசக்கூடாது என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும், கபில் தேவ் இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஆவார். அதன் பின்னர்தான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சி பெற்றது. இந்தியா கிரிக்கெட்டில் வளர்ந்த நாடாக மாறியது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.