யுவராஜ் சிங் தந்தை மீது பாய்ந்தது வழக்கு.. பெண்கள் குறித்து அவதூறாக பேசினாரா? சர்ச்சை வீடியோ
சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் தந்தை, தற்போது ஒரு வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வெப் சீரிஸ் ஒன்றில் இடம்பெற்ற சில வினாடி காட்சி, தற்போது அவர் மீது கிரிமினல் வழக்கு பாயும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் அந்த வீடியோவில் அவர் பெண்கள் குறித்து அவதூறாக பேசி இருப்பதாகக் கூறி புகார் பதியப்பட்டுள்ளது.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் மீதுதான் சண்டிகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் யோக்ராஜ் சிங் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இந்தியில் வெளியான 'லுக்கே' என்ற இணையத் தொடரில் யோக்ராஜ் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தத் தொடரில் வரும் ஒரு காவல் நிலையக் காட்சியில், போலீஸ் அதிகாரிகளிடம் பேசும் யோக்ராஜ் சிங், பெண்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசுவது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த குறிப்பிட்ட காட்சியின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனங்களைப் பெற்றது. பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சமூக வலைதளங்களில் அவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இதனைத் தொடர்ந்து, சண்டிகர் செக்டார் 36 காவல் நிலைய போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் பிரிவு 79 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 62 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையையும் தற்போது தொடங்கியுள்ளனர்.
யோக்ராஜ் சிங் இப்படி சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் 2026ல், கிரிக்கெட் வீரர்களின் ஓய்வு முடிவுகள் குறித்து அவர் பேசியதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. வீட்டிலிருக்கும் பெண்களும் மனைவியரும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறி வீரர்களை விரைவாகவே ஓய்வுபெறச் சொல்கிறார்கள் என்றும், ஒரு சிறந்த வீரரின் லட்சியங்களுக்கு நடுவில் பெண்கள் வரக்கூடாது என்றும் அவர் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாகப் பெண்கள் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில், தற்போது நேரடியாக காவல்துறை வழக்கு பாய்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
