ஹைதராபாத்: ஐபிஎல் தொடரிலும், இந்திய டி20 அணியிலும் அதிரடி பேட்ஸ்மேனாக அறியப்பட்டு வருகிறார் அபிஷேக் ஷர்மா. அவரை தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து வளர்த்து விட்டவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
இந்த நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், அபிஷேக் ஷர்மா துவக்கத்தில் இரவு நேரங்களில் பார்ட்டிகளிலும், பெண் தோழிகளுடனும் நேரத்தை செலவிட்டு வந்ததாகவும், தந்தையின் பேச்சையும் மதிக்காமல் நடந்து வந்ததாகவும், அப்போது யுவராஜ் சிங் தான் தனது கட்டுப்பாட்டில் அவரை கொண்டு வந்து மாற்றியதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தை (PCA) சேர்ந்தவர்கள் அபிஷேக் ஷர்மா பற்றி யுவராஜ் சிங் சில தகவல்களைக் கேட்டபோது, வேண்டுமென்றே அவரை ஒரு பவுலர் எனக் கூறி அவரது பேட்டிங் திறமையை மறைக்கப் பார்த்ததாகவும் யோக்ராஜ் சிங் அதிரடியான புகாரை கூறியிருக்கிறார்.
இது குறித்த யோக்ராஜ் சிங் பேசியதாவது: "அபிஷேக் ஷர்மா அப்போது இரவு நேரப் பார்ட்டிகள், பெண் தோழிகள் என்று இருந்தார். அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா? யுவராஜ் சிங் அபிஷேக்கின் தந்தையிடம் 'அபிஷேக் ஷர்மாவை வீட்டிலேயே அடைத்து வையுங்கள்' என்றார். ஆனால், அவரது தந்தையால் அபிஷேக் ஷர்மாவை கையாள முடியவில்லை. அதன் பின்னர் யுவராஜ் சிங் தனது கட்டுப்பாட்டில் அபிஷேக் ஷர்மாவை கொண்டு வந்தார்."
"ஒருமுறை அபிஷேக் ஷர்மா இரவு நேரத்தில் வெளியே சென்று இருந்தபோது, யுவராஜ் சிங் அவருக்கு தொலைபேசியில் அழைத்து, 'எங்கே இருக்கிறாய்?' என்று சத்தம் போட்டார். 'இரவு 9 மணி ஆகிறது. நீ உடனே படுக்கைக்கு செல். நான் சொல்வது புரிகிறதா? இல்லை என்றால் நான் நேரிலேயே வந்து விடுவேன்' என்று அவரை கண்டித்தார். அதன் பிறகு அபிஷேக் ஷர்மா தனது தொலைபேசியை தந்தையிடம் கொடுத்துவிட்டு படுக்கைக்குச் சென்றார். அதன் பின்னர் யுவராஜ் சிங் அபிஷேக்கின் தந்தையிடம், 'ஐந்து மணிக்கு எல்லாம் அபிஷேக் ஷர்மாவை எழுப்பி விடுங்கள்' என்றார்." இவ்வாறு யோக்ராஜ் சிங் அபிஷேக் ஷர்மாவை யுவராஜ் சிங் நல்வழிப்படுத்தியதைப் பற்றி கூறினார்.
பஞ்சாப் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் அபிஷேக்கின் திறமையை மறைக்க முயன்ற சம்பவத்தைப் பற்றியும் விவரித்தார். "நாங்கள் அபிஷேக் ஷர்மாவின் செயல்பாடுகளைப் பற்றி பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திலும் அதன் பயிற்சியாளர்களிடமும் விசாரித்தோம். அப்போது அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? 'சார், இவர் ஒரு பந்துவீச்சாளர். இவர் பந்துவீச மட்டும் தான் செய்வார்'."
"அதன் பிறகு யுவராஜ் சிங் 'அவரது ரெக்கார்டை எடுத்து காட்டுங்கள்' என்றார். அப்போது நாங்கள் அவரது ரெக்கார்டை பார்த்தோம். அவர் அப்போதே 24 சதங்களை அடித்திருந்தார். அதன் பிறகு யுவராஜ் சிங் அவர்களிடம் 'ஏன் தவறான தகவல்களை கொடுக்கிறீர்கள்? இந்த பையன் 24 சதங்களை அடித்து இருக்கிறான்' என்றார்."
"இந்த சம்பவம் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு யுவராஜ் சிங் அந்த ரெக்கார்டுகளை எனக்கு அனுப்பி வைத்தார். 'அப்பா, இந்த வீரரைப் பற்றி கொஞ்சம் பாருங்கள்' என்றார். ஒரு வீரரைப் பற்றி சரியான தகவல்களைப் பகிர வேண்டும். இதுதான் இங்கே பிரச்சினையாக உள்ளது. சிலர் பொறாமையின் காரணமாக சில வீரர்களின் வாழ்க்கையை முடித்துவிடப் பார்க்கிறார்கள்" என்று யோக்ராஜ் சிங் கூறினார்.