மும்பை: தோனியால் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையே அழிந்துவிட்டது, தோனியை மன்னிக்கவே முடியாது என அவரது தந்தை யோக்ராஜ் சிங் ஆவேசமாக பேட்டி அளித்திருக்கிறார். மேலும், யுவராஜ் சிங் இந்தியாவுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்ததற்காகவும், புற்று நோய்க்கு எதிராக போராடி மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதற்காகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் யுவராஜ் சிங்கிற்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக இதற்கு முன் பல தகவல்கள் வெளி வந்துள்ளன. யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இதற்கு முன்பும் பல பேட்டிகளில் தோனியை கடுமையாக தாக்கிப் பேசி இருக்கிறார். தோனியால்தான் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை அழிந்து விட்டது என தற்போது ஒருபடி மேலே சென்று பேசி இருக்கிறார். தோனியை மன்னிக்கவே மாட்டேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

தோனி 2007ஆம் ஆண்டு இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது அடுத்த தலைமுறை வீரராகவும், தோனியை விட அதிக அனுபவம் கொண்டவராகவும் இருந்தார் யுவராஜ் சிங். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் என முன்னணி வீரர்கள் கேப்டன் பதவி வேண்டாம் என கூறிவிட்ட நிலையில், சேவாக் அல்லது யுவராஜ் சிங் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார்கள் என்று பலரும் எண்ணினர்.
ஆனால், 2007 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிக்கு தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அந்தத் தொடரில் இந்தியா உலகக் கோப்பை வென்றதை அடுத்து அனைத்தும் தலைகீழாக மாறியது. தோனி மூன்று வித இந்திய அணிகளுக்கும் நிரந்தர கேப்டனாக மாறினார். அப்போது யுவராஜ் சிங் இந்திய அணியில் நீடித்தாலும், 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
நீண்ட போராட்டத்துக்கு பின் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். ஆனால், அவருக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு கேப்டன் தோனி தான் காரணம் என யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் தற்போது அதிரடியாக பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், எனது மகனுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார். எல்லா விஷயமும் இப்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன." என்றார்.
மேலும், "அதை என் வாழ்க்கையில் மன்னிக்கவே முடியாது. நான் இரண்டு விஷயங்களை என் வாழ்க்கையில் செய்தது இல்லை. ஒன்று, எனக்கு எதிராக செயல்பட்டவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன். இரண்டு, நான் எனக்கு எதிராக செயல்பட்டவர்களை அணைக்கவும் மாட்டேன். அது எனது குடும்ப உறுப்பினர்களோ அல்லது எனது குழந்தைகளோ." என்றார் யோக்ராஜ் சிங்.
மேலும், "தோனி எனது மகனின் வாழ்க்கையையே அழித்துவிட்டார். யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார். யுவராஜ் சிங் போன்ற ஒரு மகனை முடிந்தால் நீங்கள் பெற்று எடுங்கள். கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக் கூட இதற்கு முன், இன்னொரு யுவராஜ் சிங் நமக்கு கிடைக்க மாட்டார் என கூறி இருக்கின்றனர். அவர் புற்று நோய்க்கு எதிராக போராடி பின் மீண்டும் விளையாடியதற்காகவும். நாட்டுக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்ததற்காகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்." என்று கூறினார் யோக்ராஜ் சிங்