கொழும்பு: பாகிஸ்தான் அணியில் எந்த சூழலிலும் ஆட்டத்தை தங்கள் பக்கம் மாற்றும் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று இந்திய அணியின் விராட் கோலி கூறியுள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எப்படி டி20 உலகக்கோப்பைத் தொடர் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக அமைந்ததோ, அதேபோன்ற ஒரு போட்டியை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதேபோல் பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி மற்றும் இந்திய அணியின் விராட் கோலி இடையிலான யுத்தத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 536 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் இந்திய அணியை வீழ்த்த வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது அவசியமானதாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் விராட் கோலி பேசுகையில், பாகிஸ்தான் அணியின் பவுலிங் தான் அவர்களின் பலம் என்று பார்க்கிறேன். எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களை எதிர்கொள்ள மிகச்சிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் விராட் கோலி குறித்து ஷடாப் கான் பேசுகையில், விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரை எதிர்கொள்ளும் போது நாம் அதிகமாக திட்டமிட வேண்டும். கிரிக்கெட்டை பொறுத்தவரை அதிகமாக மைண்ட் கேம்ஸ் இருக்கும். பேட்ஸ்மேனின் மூளைக்குள் பவுலரும், பவுலரின் மூளைக்குள் பேட்ஸ்மேனும் புகுந்து விளையாட வேண்டும். அப்போது தான் சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்ற முடியும்.
விராட் கோலி எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடுவார். கடந்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் அப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க முடியாது. விராட் கோலியின் சிறப்பு என்னவென்றால், அவரால் எந்த அணிக்கு எதிராகவும் எந்த மைதானத்தில் எந்த நிலையிலும் ஆட்டத்தை மாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.