சாதனைகளை புரிந்த இந்தியா
கடந்த 2000ல் இந்தியாவின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார் சவுரவ் கங்குலி. தொடர்ந்து அணியை சிறப்பான வகையில் முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றார். கடந்த 2002ல் நாட்வெஸ்ட் தொடரில் இந்தியாவை வெற்றி கொள்ள செய்தது, 2003ல் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற செய்தது என அவரது கேப்டன்ஷிப்பில் இந்தியா பல்வேறு சாதனைகளை புரிந்தது.
2005ல் கேப்டன் பதவி பறிப்பு
வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரின் கேரியரில் முக்கிய பங்காற்றியுள்ளார் சவுரவ் கங்குலி. அவர் தன்னுடைய கேரியரில் மிகப்பெரிய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். இந்நிலையில் தான் 2005ல் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தன்னுடைய கேரியரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தததாக தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார்.
மனம் நொந்த கங்குலி
அணியில் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக இருந்தபோதிலும் அணியின் பயிற்சியாளர் க்ரேக் சாப்பலுடன் அவருக்கு ஆரம்பம் முதலே இருந்த கருத்து வேறுபாடுகள் உள்ளிட்டவை அவரின் கேப்டன் பதவி பறிப்பிற்கு காரணமாக அமந்தது. இந்நிலையில் கேப்டன் பதவி பறிப்பால் தான் மனம் நொந்ததாக அவர் தற்போது சுட்டிக் காட்டியுள்ளார்.
நெருக்கடி சூழலை சமாளிக்க வேண்டும்
மேலும் நம்முடைய வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு நெருக்கடி சூழல்களை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கான மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.