லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் லண்டன் ஒருநாள் போட்டி கோப்பைத் தொடரில் இருந்து காயம் காரணமாக பிரித்வி ஷா விலகியுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார் பிரித்வி ஷா. ஆனால் ஊக்க மருந்து சர்ச்சை, சீனியர் வீரர்களை மதிக்காதது, களத்தில் வெளியே யூட்யூபருடனான மோதல் என்று பிரச்சனைகளில் மட்டுமே பிரித்வி ஷா சிக்கி வந்தார். ஐபிஎல் தொடரில் ஃபார்மில்லாமல் இருந்தது, ஃபிட்னஸ் பிரச்சனைகளும் உடன் சேர, ஆசியப் போட்டிகளுக்கான அணியில் கூட பிரித்வி ஷா சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் தியோதர் டிராபியில் கூட பங்கேற்காமல் திடீரென இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அங்கு ராயல் லண்டன் ஒன் டே கோப்பை தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஃபார்மில் இல்லாத பிரித்வி ஷாவை நார்த்தம்டன்ஷையர் ஒப்பந்தம் செய்தது ஏன் புரியாமல் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.
ஆனால் பிரித்வி ஷா கிண்டல்களுக்கு செவி கொடுக்காமல், வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் பலனாக 153 பந்துகளில் 28 பவுண்டரிகள், 11 சிக்சர்களுடன் 244 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார்.
இதனையடுத்து டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் 76 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து மிரட்டலான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதனால் பிரித்வி ஷா விரைவில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரித்வி ஷா டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதன்பின் பிரித்வி ஷாவின் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இதன் ஸ்கேன் அறிக்கை இன்று வெளி வந்த நிலையில், பிரித்வி ஷாவின் முழங்காலில் ஏற்பட்ட காயம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக தெரிய வந்துள்ளது. இதனால் லண்டன் ஒன் டே கோப்பை தொடரில் இருந்து மொத்தமாக பிரித்வி ஷா விலகியுள்ளார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.