மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி, விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிரித்வி ஷா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இந்த தடைசெய்யப்பட்ட மருந்து இருமல் மருந்துகளில் பொதுவாக காணப்படுவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பிரித்வி ஷாவுக்கு நவம்பர் 15, 2019 வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது பிரித்வி ஷா கடந்த பிப்ரவரி 22, 2019-ல் சையத் முஷ்டாக் அலி போட்டிகளின் போது அளித்த சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட டெர்புடலின் என்ற மருந்து இருந்துள்ளது.
பிரித்வி ஷா மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகளுக்காக இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதில் இந்த டெர்புடலைன் இருந்ததால் அவர் கவனக்குறைவாகத் தெரியாமல் இதை எடுத்து கொண்டார். இது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தாகும்.
இது குறித்து பிரித்வி ஷா கூறும்போது, ஆட்டத் திறனை ஊக்குவிக்கும் ஊக்க மருந்தாக இதை எடுத்து கொள்ளவில்லை, மூச்சுக்குழல் பிரச்சினைக்காக எடுத்து கொண்டேன் என்றார். பிப்ரவரி மாதமே இது தெரியவந்ததால் அப்போதிலிருந்து தடை கணக்கிடப்பட்டு 8 மாத காலம் நவம்பர் 15ம் தேதி வரை நீடிப்பதால் அவர் நவம்பர் 15ம் தேதி வரை தடைசெய்யப்பட்டுள்ளார்.
இவரோடு மட்டுமல்லாமல் விதர்பா கிரிக்கெட் வீரர் அக்ஷய் துல்லர்வார், ராஜஸ்தான் வீரர் திவ்ய காஜ்ராஜ், ஆகியோரும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்தனர். அவர்களும் பிசிசிஐயினால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.