ஹராரே: ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் 26 பந்துகளுக்கு 9 சிக்சர், 4 பவுண்டர் உட்பபட 80 ரன்களை இந்திய முன்னாள் வீரர் யூசுப் பதான் விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய யூசுப் பதான், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியவர். 2007 டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கியதோடு, 2011 உலகக்கோப்பைத் தொடரின் முக்கிய வீரராகவும் யூசுப் பதான் விளையாடி கோப்பையை வென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவித்த யூசுப் பதான், வர்ணனையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் முதல்முறையாக ஜிம்பாப்வே ஆப்ரோ டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராபின் உத்தப்பா, ஸ்ரீசாந்த், யூசுப் பதான் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் இன்றைய ஆட்டத்தில் டர்பன் கலாண்டர்ஸ் அணியை எதிர்த்து ஜோபர்க் பஃபல்லோஸ் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் அணியின் ஃபெளட்சர் 14 பந்துகளில் 39 ரன்களும், ஆசிஃப் அலி 12 பந்துகளில் 32 ரன்களும், நிக் வெல்ச் 9 பந்துகளில் 24 ரன்களும் விளாசி அசத்தினர்., இதன் காரணமாக டர்பன் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்து அசத்தியது. இதனால் ஜோபர்க் அணிக்கு 141 என்ற சவாலாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து ஜோபர்க் அணி சார்பாக ஹஃபீஸ் - டாம் பேண்டன் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் டாம் பேண்டன் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஹஃபீஸ் 17 ரன்களிலும், சமீத் 16 ரன்களிலும், பொப்பாரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனால் இந்த அணியின் வெற்றிக்கு கடைசி 46 பந்துகளில் 126 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் களமிறங்கிய யூசுப் பதான், முதல் பந்தில் இருந்தே அதிரடியை தொடங்கினார். ஒரு ஓவருக்கும் 2 சிக்சர்களுக்கு மேல் பறந்துகொண்டே இருந்தது. 20 பந்துகளில் அரைசதம் அடித்து யூசுப் பதான் அசத்த, கடைசி ஓவரில் ஜோபர்க் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த ஓவரில் இரு சிக்சர், இரு பவுண்டரி விளாசி யூசுப் பதான் வெற்றியை உறுதி செய்தார். இறுதியாக 26 பந்துகளுக்கு 80 ரன்களை விளாசி கடைசி வரை யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் இருந்தார்.