கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத வீரர்கள்
மும்பை: உலகக் கோப்பையை 2வது முறையாக வென்ற மகிழ்ச்சியிலும், சந்தோஷத்திலும் இந்திய வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்

மகா உற்சாகத்துடன் தனது உலகக் கோப்பையை முடித்துள்ளது இந்தியா. கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை அட்டகாசமான வெற்றிக்கு இட்டுச் சென்றார் டோணி. அவர் சிக்சரை அடித்து போட்டியை முடித்து வைத்தபோது இந்திய வீரர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டனர். மைதானத்திற்குள் ஓடி வந்த அவர்கள் டோணியையும், அவருக்குத் துணையாக ஆடிய யுவராஜ் சிங்கையும் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.
யுவராஜ் சிங்கோ உற்சாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதனர்.
பூரிப்பில் கேரி கிர்ஸ்டன்
இந்திய கிரிக்கெட் அணியை ஒட்டுமொத்தமாக மாற்றிய பெருமைக்குரிய பயிற்சியாளர் போட்டியின் முடிவில் பெரும் உற்சாகத்துடன் வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
வழக்கமாக அதிகம் சிரிக்காத அவர் இன்று முகம் மலர பெரும் உற்சாகத்துடன், புன்னகையுடன் காணப்பட்டார்.
ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சச்சின்-கிர்ஸ்டன்
இந்த உலகக் கோப்பைப் போட்டிதான் அனேகமாக சச்சினுக்கு கடைசிப் போட்டி என்பதால், அவரை வீரர்கள் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வந்து மகிழ்ந்தனர்.
அதே மரியாதையை பயிற்சியாளர் கிர்ஸ்டனுக்கும் வீரர்கள் கொடுத்தனர். விராத்கோலியும், சுரேஷ் ரெய்னாவும் கிர்ஸ்டனை தோளில் தூக்கிக் கொண்டு போனது வெட்கத்திலும், மகிழ்ச்சியிலும் நெளிந்தார், நெகிழ்ந்தார் கிர்ஸ்டன்.
Story first published: Thursday, June 7, 2012, 12:23 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications