யுவராஜ் அடித்த '6 சிக்ஸர்கள்'.. நேரில் கிளம்பி வந்த பிராட் தந்தை.. என்ன செய்தார் தெரியுமா?
மும்பை: ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட பிறகு, ஸ்டூவர்ட் பிராட் தந்தை தன்னிடம் என்ன சொன்னார் என்பதை யுவராஜ் தெரிவித்துள்ளார்.
2007 உலகக் கோப்பை.. ரசிகர்கள் எவருமே மறக்க முடியாத தொடர் அது. இளைஞர் தோனி தலைமையில், முற்றிலும் இளம் வீரர்களை வைத்துக் கொண்டு தென்னாப்பிரிக்க பயணித்த இந்திய அணி, முதல் சுற்றை கூட தாண்டாது என்று தான் நினைத்தனர்.
ஏன்.. இந்திய அணி நிர்வாகமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சென்றது. ஆனால், வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை ஏந்தியது தோனி படை.

யுவராஜ் சிங்
இத்தொடரில், இந்திய அணியின் வெற்றிப் பயணத்துக்கு மிக முக்கியமான அங்கம் வகித்த டாப் 3 இந்திய வீரர்களில் முக்கியமானவர் யுவராஜ் சிங். அதிலும், இங்கிலாந்துக்கு எதிராக அவர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அதகளம் புரிந்தது அல்டிமேட் ரகம். இன்று இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர், மூத்த பவுலர், 500 டெஸ்ட் விக்கெட்டுகளுக்கும் மேல் கைப்பற்றிய பவுலர் என்று பல அடையாளங்களை ஏந்தி கம்பீரமாக நிற்கிறார்.

வம்பிழுத்த ஃபிளிண்டாப்
ஆனால், அன்று அந்த டி20 போட்டியில், பிராட் அனுபவமே இல்லாத இளம் வீரர். அவர் பந்து வீச வருவதற்கு முன்பு, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாப், யுவராஜிடம் வம்பிழுக்க, அந்த கோபத்தை வசமாக வந்து பிராட்டிடம் கொட்டித் தீர்த்தார் யுவராஜே. விளைவு, ஒரே ஓவரில் மைதானத்தின் நாளா பக்கமும் பறந்தன 6 சிக்ஸர்கள். அதில், பிராட் முகத்தை பார்க்கவே அவ்வளவு பரிதாபமாக இருந்தது. அவர் எப்படிப்பட்ட பந்தை வீசினாலும், அது மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் பெவிலியன் நோக்கி திரும்பி பறந்து கொண்டிருந்த போது, கேமரா பிராட் முகத்தை ஃபோகஸ் பண்ணும் போதெல்லாம், நமக்கே பாவமாக தான் இருந்தது.

மனமார்ந்த நன்றி
இந்நிலையில், சமீபத்தில் இந்த சம்பவம் குறித்து பேசிய யுவராஜ், "2007 உலகக் கோப்பை டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியின் போது, ஸ்டூவர்ட் பிராட் தந்தை, க்றிஸ் பிராட் என்னை வந்து சந்தித்தார். அன்றைய போட்டியின் மேட்ச் ரெஃப்ரீ அவர் தான். அவர் என்னிடம், "எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை ஏறக்குறைய முடித்துவிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி" என்றார். அதற்கு நான், "தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. எனது ஓவரில் கூட 5 சிக்ஸர்கள் பறந்துள்ளது. எனவே இந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் என்றேன்.

பெரிய ஆளாய் வருவாய்
மேலும், ஸ்டூவர்ட் பிராட்டிடம் எனது ஷர்ட் கொடுக்கும் போது, அதில் 'இதன் வலி என்னவென்று எனக்கு தெரியும். ஏனெனில், எனது ஓவரில் 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. நீ இங்கிலாந்தின் எதிர்காலமாய் இருப்பாய். நீ நிச்சயம் பல சாதனைகளை படைக்கப் போகிறாய் என்று எழுதிக் கொடுத்தேன். அதேபோல் இன்று அவர் எட்டியிருக்கும் உயரத்தைப் பாருங்கள். இங்கிலாந்தில் 500க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி தவிர்க்க முடியாத உருவெடுத்துள்ளார்" என்று யுவராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications