"கடைசி நேரத்தில் கை வைக்காதீங்க".. கம்பீருக்கு யுவராஜ் சிங் எச்சரிக்கை.. 2027 உலகக் கோப்பை திட்டம்
மும்பை: 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சமீப காலமாக இந்திய அணி முக்கிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தடுமாறி வரும் நிலையில் அவர் அதை தவிர்க்க முக்கிய ஆலோசனையை அளித்துள்ளார்.
இந்திய அணியில் அடிக்கடி மாற்றங்கள் செய்வதைத் தவிர்த்து, 16 முதல் 20 வீரர்கள் கொண்ட ஒரு நிலையான அணியை இப்போதே உருவாக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் சுட்டிக் காட்டி இருக்கிறார். சமீபகாலமாக இந்திய அணியில் காயம் மற்றும் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாகப் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்துப் பேசிய யுவராஜ் சிங், "உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், ஒரு நிலையான அணியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். கடைசி நேரத்தில் அவசரமாகப் பெரிய மாற்றங்களைச் செய்வதே முந்தைய தொடர்களில் இந்திய அணி தடுமாறியதற்குக் காரணமாக அமைந்தது. எனவே, நாம் நம்பும் வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து, அவர்கள் தோற்றாலும் ஜெயித்தாலும் முழு ஆதரவை வழங்க வேண்டும்" என்றார்.
தற்போது ஒருநாள் போட்டிகளை விட டி20 போட்டிகளே அதிகம் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டிய யுவராஜ், ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடப்போகும் அனைத்து வீரர்களுக்கும் போதிய அளவு போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம் என்றார்.
மேலும், ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உதாரணமாகக் காட்டிய அவர், "ஆஸ்திரேலியா உலகக் கோப்பைகளை வெல்லக் காரணம், அவர்களிடம் தனி ஆளாக போட்டியை மாற்றும் பல மேட்ச்-வின்னர்கள் இருப்பதே ஆகும். ஒரு நாளில் ஒருவர் ஆட்டத்தை முடிப்பார்; நெருக்கடி வரும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றியை ஈட்டுவார்கள். அதேபோன்ற மனநிலையை இந்திய அணியும் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
நேரடியாக இறுதிப்போட்டி பற்றி யோசிக்காமல், படிப்படியாக முன்னேறி முதலில் அரையிறுதியை உறுதி செய்ய வேண்டும் என்றும், வீரர்கள் மீது வைக்கும் முழு நம்பிக்கையே உலகக் கோப்பையை வெல்ல உதவும் என்றும் யுவராஜ் சிங் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications

