மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் - ஹெசல் கீச் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், மகளின் புகைப்படத்தை வெளியிட்டு யுவராஜ் சிங் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகள் மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் யுவராஜ் சிங். இந்திய அணி 2007ஆம் ஆண்டு வென்ற டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு வென்ர 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரிலும் முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். இன்று வரை யுவராஜ் சிங் போன்ற ஒரு ஆல் ரவுண்டர் கிடைக்காமல் இந்திய அணி திண்டாடி வருகிறது.

அதேபோல் இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் அளவிற்கு ஒரு பிளே பாயை யாரும் பார்த்திருக்கவே மாட்டார்கள். தீபிகா படுகோனே முதல் ரியா சென், லட்சுமி ராய் வரை யுவராஜ் சிங் ஏராளமான நடிகைகளுடன் காதல் உறவில் இருந்திருக்கிறார். கடைசியாக பில்லா படத்தில் நடித்த ஹெசல் கீச்சுடன் காதலில் இருந்து திருமணம் செய்து கொண்டார்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் சிங், பொறுப்புடன் செயல்பட்டு வந்தார். அந்த சூழலில் ஹெசல் கீச்சை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதன்பின் இவர்கள் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு யுவராஜ் சிங் - ஹெசல் கீச் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஓரியன் என்று பெயர் வைத்து புகைப்படத்தை வெளியிட்டனர்.
இந்த நிலையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் யுவராஜ் சிங் - ஹெசல் கீச் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை யுவராஜ் சிங், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதில், எங்கள் இளவரசி ஆராவின் வருகை மூலம் எங்கள் குடும்பம் நிறைவு பெற்றுள்ளது. இவர்களால் எங்களின் தூக்கமில்லாத இரவுகள் கூட மகிழ்ச்சியாக மாறிவிட்டன என்று இரு குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து யுவராஜ் சிங் - ஹெசல் கீச் தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்கள், நண்பர்கள், பாலிவுட் பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யுவராஜ் சிங்கின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ள நிலையில், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.