மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், தனது தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து பேசி வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக முன்னாள் கேப்டன்களான எம்.எஸ் தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். சமீபத்தில் வெளியான பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள யுவராஜ் சிங், தனது தந்தை மற்ற வீரர்களைப் பற்றி பேசுவதை தான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
"எம்.எஸ் தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி தேவையில்லாமல் பேசுவது சரியில்லை என்று எனது தந்தையிடமும் நான் நேரடியாகவே கூறியுள்ளேன்" என யுவராஜ் மனம் திறந்துள்ளார். மேலும், இந்த பாட்காஸ்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்தும் அவர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங் கடந்த பல ஆண்டுகளாகவே தோனியை கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது மகனை அணியிலிருந்து நீக்கியதற்கு தோனியே முக்கிய காரணம் என அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். அதேபோல, 1980களில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை கபில் தேவ் தான் நாசமாக்கினார் என்றும், இதனால் கோபமடைந்து ஒருமுறை துப்பாக்கியுடன் கபில் தேவ் வீட்டிற்கேச் சென்றதாகவும் யோக்ராஜ் சிங் கூறியிருந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கபில் தேவ் இது குறித்து பெரிதாக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
எனினும், யுவராஜ் சிங்கை அணியிலிருந்து நீக்கியது தேர்வுக்குழுவின் முடிவுதான் என்றும், அதில் தோனிக்கு எந்த தனிப்பட்ட பங்கும் இல்லை என்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் சமீபத்தில் விளக்கமளித்திருந்தார். இதன்பிறகே யோக்ராஜ் சிங் தனது நிலைப்பாட்டை மாற்றி, தோனியைப் பாராட்டிப் பேசத் தொடங்கினார்.

உண்மையில், 2017ஆம் ஆண்டு யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியபோது, அணியில் அவரது இடம் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் தோனி தான் அவருக்குத் தெளிவான விளக்கத்தைக் கொடுத்தார். தோனியின் அந்த வெளிப்படையான பேச்சே, 2019ஆம் ஆண்டு தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உதவியாக இருந்தது என யுவராஜ் சிங் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது தந்தையின் பேச்சால் ஏற்பட்ட அனைத்து சங்கடங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யுவராஜ் சிங் தற்போது இந்த மன்னிப்பைக் கோரியுள்ளார்.