மும்பை : 2011 உலகக்கோப்பை வென்ற யுவராஜ் சிங்கை பற்றி யாருமே இன்று பேசுவதில்லை. அதற்கு காரணமே போட்டியை ஒளிபரப்பும் சேனல்கள் தான் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் கவுதம் கம்பீர். மறைமுகமாக தோனியை மட்டுமே தொலைக்காட்சிகள் காட்டியதாக அவர் சொல்லி இருப்பது சலசலப்பை கிளப்பி இருக்கிறது.
2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் பல போட்டிகளில் யுவராஜ் சிங் தன் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுக் கொடுத்தார். 8 இன்னிங்க்ஸில் 362 ரன்கள் குவித்து இருந்தார். இதில் நான்கு முறை நாட் அவுட்டாக கடைசி வரை நின்றது குறிப்பிடத்தக்கது. ஒரு சதம், நான்கு அரைசதமும் இதில் அடங்கும்.
அந்த உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஸ்பின்னர்கள் இருவர். ஒருவர் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் முத்தையா முரளிதரன். மற்றொருவர், ஆல் - ரவுண்டர் யுவராஜ் சிங். இருவரும் தலா 15 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர். அந்த அளவுக்கு யுவராஜ் சிங் அப்போது பந்துவீச்சில் கலக்கினார். அவருக்கு உலகக்கோப்பை நாயகன் விருதும் அளிக்கப்பட்டது.

ஆனால், இப்போதும் பலர் தோனி தான் உலகக்கோப்பை வென்று கொடுத்தார் எனக் கூறுவது உண்டு. உண்மையில் தோனி 2011 உலகக்கோப்பை தொடரில் 8 இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்து 241 ரன்கள் எடுத்து இருந்தார். ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார். அது உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்டது. அப்போது கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 91 ரன்கள் எடுத்து இருந்தார். அதனாலேயே பலரும் தோனி தான் உலகக்கோப்பை வென்று கொடுத்தார் என கூறி வருகிறார்கள் என கவுதம் கம்பீர் நீண்ட நாட்களாக அதை விமர்சனம் செய்து வருகிறார்.
தற்போது பலரும் யுவராஜ் சிங்கை மறந்ததற்கு போட்டியை ஒளிபரப்பும் போது ஒரே வீரரையே நீண்ட நேரம் காட்டுவது தான் எனவும், அவர்கள் குறிப்பிட்ட வீரரின் விளம்பர நிறுவனம் போல செயல்படுகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இது பற்றி கவுதம் கம்பீர் பேசுகையில், "சிலரை குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்கள் என கூறுபவர்கள் யாரோ,அவர்கள் தான் அந்த வீரரை குறைத்து பேசுகிறார்கள். உண்மையில் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் என யாருமே இல்லை. 2011 உலகக்கோப்பை தொடர் நாயகனை (யுவராஜ் சிங்கை) பற்றி யார் இப்போது பேசுகிறர்கள்? அதற்கு காரணம் அவரிடம் நல்ல விளம்பர நிறுவனம் இல்லை." என்றார்.
மேலும், "ஒரு போட்டி ஒளிபரப்பாளர் விளம்பர நிறுவனம் போல செயல்படக் கூடாது. வீரர்கள் அறையில் அமர்ந்து இருக்கும் அனைவருக்கும் போட்டி ஒளிபரப்பாளர் சரி சமமாக நடந்து கொள்ள வேண்டும். நான் இரண்டு வீரர்களில் ஒரு வீரரை 2 மணி நேரம் 50 நிமிடம் காட்டிவிட்டு, மற்றொரு வீரரை 10 நிமிடம் மட்டுமே காண்பித்தால், எந்த வீரர் அதிக நேரம் காட்டப்படுகிறாரோ அவர் ஒரு பிராண்ட் ஆக மாறி விடுவார்" என இதன் பின்னணி குறித்து கூறினார் கம்பீர். இதில் மறைமுகமாக தோனியை தான் கம்பீர் குறிப்பிடுகிறார் என தெரிகிறது.