லண்டன்: யுவராஜ் சிங் லண்டனில் நடத்திய புற்றுநோய் நிதி திரட்டல் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்றனர். மேலும், கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்திய அணி வீரர்கள் அனைவரும் பிசிசிஐ-யின் ஒப்புதலோடு அந்த நிகழ்ச்சியில் தனி சீருடை அணிந்து பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் மற்றும் மற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள், யுவராஜ் சிங் ஆகியோர் ஒன்றாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டது. ஆனால், அதில் விராட் கோலி இடம்பெறவில்லை. அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்; பலருடன் பேசினார். ஆனால், அவர் இந்த புகைப்படத்தில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிசிசிஐ-க்கும் விராட் கோலிக்கும் தீவிரமான கருத்து வேறுபாடு பிரச்சனைகள் இருக்கலாம், அதனால்தான் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தில் இருந்து அவர் விலகி விட்டார் என பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வுப் பின்னணி:
விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தார். அது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஏனெனில், விராட் கோலிக்கு தற்போது 35 வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏற்கனவே அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு அதிக பணிச்சுமையும் இருக்காது எனக் கருதப்பட்டது.
ஆனால், திடீரென விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் அதற்கு முன்பு விளையாடிய நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் சரியாக ஆடவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதனால், உள்ளூர் போட்டியில் ஆடினால் தான் வாய்ப்பு என பிசிசிஐ அனைத்து வீரர்களுக்கும் அறிவுறுத்தி இருந்தது. அதை ஏற்று விராட் கோலி டெல்லி மாநில அணிக்காக ஒரு போட்டியில் விளையாடியிருந்தார். ஆனால் அதிலும் பெரிதாக ஆடவில்லை. எனினும், அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அனைவரும் நம்பினர்.
ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம், அதை உணர்ந்துதான் விராட் கோலி ஓய்வை அறிவித்து விட்டார் என கூறப்படுகிறது. இதில் உண்மை என்ன என பிசிசிஐயோ அல்லது விராட் கோலியோதான் சொல்ல வேண்டும். ஆனால் இரு தரப்புக்கும் இடையே தகவல் தொடர்பில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம் என முன்னாள் வீரர்களும் கூறுகின்றனர்.
விராட் கோலிக்கு டெஸ்ட் அணியின் கேப்டன் பதவி அளிக்கப்பட இருந்ததாகவும், கேப்டன் பதவி கிடைத்தால் பேட்டிங் நிச்சயம் முன்னேறிவிடும் என அவர் நம்பியதாகவும் தினேஷ் கார்த்திக் போன்ற விராட் கோலிக்கு நெருக்கமான சிலர் பேட்டியில் கூறியிருந்தனர். ஆனால், விராட் கோலிக்கு வழங்கப்படவிருந்த கேப்டன் பதவி சுப்மன் கில்லுக்கு சென்றது. இதை அறிந்து தான் விராட் கோலி முன்பே ஓய்வு அறிவித்து விட்டார் என்கிறார்கள்.
இது போன்ற கருத்து வேறுபாடுகளால் தான் யுவராஜ் சிங் புற்றுநோய் தொடர்பாக தனது உதவி மையத்திற்கு நிதி திரட்ட வேண்டி லண்டனில் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற விராட் கோலி, இந்திய அணியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்று பரவலாகப் பேசப்படுகிறது.