மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், தான் ஏன் இதுவரை கிரிக்கெட் வர்ணனையாளராக மாறவில்லை என்பது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். தன் மீது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை முன்வைத்தவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பல முன்னாள் முன்னணி வீரர்கள் வர்ணனையாளர்களாக மாறி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வரும் நிலையில், யுவராஜ் சிங் மட்டும் கோல்ஃப் விளையாடுவது மற்றும் இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது எனத் தனது பாதையை மாற்றிக்கொண்டார். அவர் ஏன் வர்ணனையாளராக வரவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வந்தது.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசிய அவர், "நான் இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகிறேன். எனது கிரிக்கெட் ஆட்டத்தை விமர்சிப்பதை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் சிலர் என் மீது தனிப்பட்ட முறையில் மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர். நீங்கள் விளையாட்டைப் பற்றிப் பேசினால் பரவாயில்லை, ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும்போது அதை ஒருபோதும் மறக்க முடியாது" என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், "அப்படி தனிப்பட்ட முறையில் என்னைத் தரக்குறைவாகப் பேசியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து என்னால் கிரிக்கெட் வர்ணனை செய்ய முடியாது. விளையாட்டைப் பற்றிப் பேசுவதற்கும், அது எப்படி வளர்ந்துள்ளது என்பதைப் பற்றி விவாதிக்கவும் வர்ணனையாளர் பணி ஒரு சிறந்த இடம்தான். ஆனால், அந்த நபர்களுடன் அமரக்கூடாது என்ற இந்த ஒரே காரணத்திற்காகவே நான் வர்ணனை செய்ய வருவதில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதே பேட்டியில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்குத் தான் அளித்த ஆலோசனைகள் குறித்தும் யுவராஜ் சிங் பகிர்ந்து கொண்டார். கடந்த 2024 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்காத போது, இருவருக்கும் இடையே ஒரு முக்கிய உரையாடல் நடந்துள்ளது.

கடந்த 2 முதல் 3 ஐபிஎல் சீசன்களாக சஞ்சு சாம்சனின் பேட்டிங்கைத் தான் தீவிரமாகக் கவனித்து வருவதாகக் கூறிய யுவராஜ் சிங், அவரது கால்களின் நகர்வில் உள்ள முக்கிய குறையைச் சுட்டிக்காட்டியுள்ளார். "கால்களின் நகர்வைச் சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால் தொடர்ந்து சிக்கலில் மாட்டுவாய். ரன் அடிக்கிறாயா இல்லையா என்பது வேறு விஷயம், ஆனால் நீ பேட்டிங் நுட்பத்தை மாற்றியாக வேண்டும்" என அறிவுறுத்தியதாக யுவராஜ் சிங் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.