மும்பை: யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கபில் தேவ் மீதான கோபத்தால் அவரை பார்க்க துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சென்றது பற்றி யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விவரித்து இருக்கிறார். அதில் தான் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கபில் தேவ் வீட்டுக்கு சென்றதாகவும், அப்போது ஒரு காரணத்தால் அவரை எச்சரித்து விட்டு மட்டும் வந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார்.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இந்திய அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கபில் தேவின் பால்ய கால நண்பராகவும் அவர் இருந்தார். கபில் தேவ் இந்திய அணியில் இடம் பெற்று விட்ட நிலையில், சில ஆண்டுகளுக்குப் பின் யோக்ராஜ் சிங் இந்திய அணியில் இடம் பெற்றார்.

இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும், ஆறு ஒருநாள் போட்டிகளிலும் யோக்ராஜ் விளையாடினார். ஆனால், கபில் தேவ் கேப்டனாக இருந்த போது யோக்ராஜ் சிங்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு கபில் தேவ் தான் முக்கிய காரணம் என அவர் மீது யோக்ராஜ் சிங் கோபமடைந்து இருக்கிறார்.
அது பற்றி தான் யோக்ராஜ் இந்த பேட்டியில் விவரித்து இருக்கிறார். யோக்ராஜ் சிங் என்ன கூறினார்? என இங்கே பார்க்கலாம். "கபில் தேவ் நார்த் ஜோன் மற்றும் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது எந்த காரணமும் இன்றி என்னை அணியில் இருந்து நீக்கினார். எனது மனைவி கபில் தேவை சந்தித்து, நீங்கள் இது குறித்து கேள்வி கேட்க வேண்டும் என்றார்."
"நான் கபில் தேவுக்கு பாடம் புகட்டுவேன் என சொன்னேன். எனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கபில் தேவின் வீடு இருந்த செக்டார் 9-க்கு சென்றேன். அங்கு கபில் தேவ் அவரது தாயாருடன் வெளியே வந்தார். நான் கபில் தேவை பலமுறை கடுமையாக திட்டினேன். உன்னால் நான் எனது நண்பனை இழந்து விட்டேன். நீ எனக்கு செய்ததற்கு அனுபவிப்பாய் என்றேன்."
"உனது தலையில் ஒரு துப்பாக்கி குண்டை செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், உனது அன்பான தாய் இங்கே இருப்பதால் உன்னை விட்டு விட்டு செல்கிறேன் என்றேன். அப்போதே நான் ஒரு விஷயத்தை முடிவு செய்தேன். இனி நான் கிரிக்கெட் ஆட மாட்டேன், யுவராஜ் சிங் தான் விளையாடுவார் என முடிவு செய்தேன். அதன் பின் 2011 இல் இந்தியா உலகக்கோப்பை வென்ற போது ஒரே ஒரு நபர் மட்டும் அழுது கொண்டிருந்தார். அது கபில் தேவ் தான்."
"அப்போது யுவராஜ் சிங் உலகக் கோப்பை வென்ற பத்திரிக்கை செய்தியை வெட்டி கபில் தேவுக்கு அனுப்பி வைத்தேன். உன்னை விட எனது மகன் சிறப்பாக விளையாடியதால் உலகக் கோப்பை வென்று இருக்கிறான் என்று அவரிடம் கூறினேன். அதன் பின் கபில் தேவ் எனக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி, "நாம் அடுத்த ஜென்மத்தில் சகோதரர்களாக இருப்போம். அடுத்த ஜென்மத்தில் ஒரே தாயின் வயிற்றில் நாம் பிறப்போம்." என்று கூறி இருந்தார்."
"கபில் தேவ் என்னை சந்திக்கவும் விரும்பினார். ஆனால், பழிவாங்கும் உணர்வு இன்னும் இருக்கிறது. அது இன்னும் வலிக்கிறது. பிஷன் சிங் பேடியும், கபில் தேவும் எனக்கு எதிராக சதி செய்தார்கள். நான் பிஷன் சிங் பேடியை எப்போதும் மன்னிக்க மாட்டேன். அந்த மனிதர் தனது படுக்கையில் கிடந்து இறந்தார்." என்று யோக்ராஜ் சிங் கூறி இருக்கிறார்.