அவமானப்படுத்திய விமர்சகர்கள்.. பொங்கி எழுந்த தந்தை.. யுவராஜ் சிங் வாழ்க்கையை மாற்றிய அந்த சம்பவம்!
மும்பை : யுவராஜ் சிங்கின் 15 வயதில் மிக மோசமான விமர்சனம் ஒன்றை சந்தித்துள்ளார். அது அவரது கிரிக்கெட் வாழ்வை மாற்றி அமைத்தது.
Recommended Video
யுவராஜ் சிங்கின் பீல்டிங் பற்றி அவரது 15 வயதிலேயே ஒரு பத்திரிக்கை மிக மோசமாக விமர்சனம் செய்து உள்ளது.
அந்த விமர்சனம் அவமானத்தை அளித்தாலும், அதில் இருந்து பொங்கி எழுந்து தன் பலவீனத்தை பலமாக மாற்றினார் யுவராஜ் சிங்.

சிறந்த பீல்டர்
யுவராஜ் சிங் அதிரடி பேட்ஸ்மேன், சுழற் பந்துவீசும் சிறந்த ஆல் - ரவுண்டர் என்பதைத் தாண்டி சிறந்த பீல்டரும் கூட. ஆட்டத்தின் போக்கை தன் பீல்டிங்கால் யுவராஜ் சிங் மாற்றிய தருணங்கள் அதிகம். யுவராஜ் சிங் பீல்டிங் நின்றால் அந்த பக்கமே பல பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்க மாட்டார்கள்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் இந்திய அணிக்கு அண்டர் 19 அணியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட போதே சிறந்த பீல்டராகவே இருந்தார். ஆனால், அதற்கு அவர் கடும் பயிற்சிகளை மேற்கொண்டதையும், அதற்கு காரணமான ஒரு சம்பவம் பற்றியும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

அனுபவத்தை பகிர்ந்தார்
இந்திய அணியில் யுவராஜ் சிங்குடன் இந்திய அணியில் இடம் பெற்ற முகமது கைஃப், மற்றொரு சிறந்த பீல்டர் ஆவார். அவருடன் பல கிரிக்கெட் அனுபவம் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது தான் யுவராஜ் சிங் தனக்கு ஏற்பட்ட அந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மிஸ்பீல்ட் செய்தார்
அப்போது தன் 15 அல்லது 16 வயதில் யுவராஜ் சிங் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடிய நேரம். ஒரு போட்டியில் தவறுதலாக மிஸ்பீல்ட் செய்து விட்டார் யுவராஜ் சிங். அந்த வயதில் உள்ளூர் போட்டிகளில் அது பெரிய தவறு இல்லை என்று தான் நினைத்து இருந்தார் யுவராஜ்.

மோசமான விமர்சனம்
ஆனால், மறுநாள் பத்திரிக்கை ஒன்றில் யுவராஜ் சிங்கை மோசமாக விமர்சனம் செய்து இருந்தனர். "கேட்வே ஆஃப் இந்தியா யுவராஜ் சிங்" எனக் கூறி பந்தை சரியாக பீல்டிங் செய்யாமல் யுவராஜ் சிங் தவற விட்டதை குறிப்பிட்டு இருந்தனர்.

யுவராஜ் சிங்கின் தந்தை முடிவு
அந்த கடும் விமர்சனத்தை யுவராஜ் சிங்கின் தந்தை படித்து விட்டார். ஒரு பக்கம் அவமானமாக இருந்தாலும், யுவராஜ் சிங்கின் பீல்டிங்கை முன்னேற்ற வேண்டும் என முடிவு எடுத்தார் அவரது தந்தை. அதன் விளைவு கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வைத்தார்.

கடும் பயிற்சி
தினமும் 30 - 40 கேட்ச் பிடிக்கவும் மற்றும் 120 - 125 முறை பந்தை பீல்டிங் செய்யவும் வைத்து கடும் பயிற்சி அளித்தார் யுவராஜ் சிங்கின் தந்தை. அதன் பின் யுவராஜ் சிங் பீல்டிங்கில் முன்னேறினார். அதன் பின் தான் அவரது கிரிக்கெட் ஆட்டம் வெகுவாக மாறியது.

உடல் உறுதி
அந்த கடுமையான பயிற்சிகள் மூலம் உடல் உறுதி அடைந்தது. அதன் பின் அவர் கிரிக்கெட் ஆடிய போது அவர் மனதில் ஒரு விஷயம் மட்டும் தான் இருந்தது. பாயின்ட் திசையில் பீல்டிங் நிற்கும் போது என்ன நடந்தாலும், பந்து தன்னை மீறி செல்லக் கூடாது என்பது தான் அது.

உதவி செய்த பீல்டிங்
அதன் பின் இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம் பெற்ற போது அவரை வெறும் பேட்ஸ்மேன் - ஆல் ரவுண்டர் என்று மட்டும் பார்க்காமல், அவரை ஒரு சிறந்த பீல்டராகவும் பார்த்தனர். அணியில் இடம் பெற பல முறை அந்த தகுதி அவருக்கு உதவி உள்ளது என்பதும் உண்மை.

கைஃப் - யுவராஜ் ஜோடி
அப்போது முகமது கைஃப் கவர் திசையிலும், யுவராஜ் சிங் பாயின்ட் திசையிலும் பீல்டிங் நிற்பார்கள். எதிரணி பேட்ஸ்மேன் இவர்கள் இருவர் இருக்கும் பக்கமும் பந்தை அடிக்க முடியாமல் முதல் பத்து ஓவர்களில் திணறுவார்கள். அந்த நிலை அதன் பின் இந்திய அணிக்கு எப்போதும் அமையவில்லை.


Click it and Unblock the Notifications