சண்டிகர்: இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த யுவராஜ் சிங் ஓய்வு முடிவை அறிவித்தபோது, அவருடைய தந்தை யோக்ராஜ் சிங் அந்த முடிவைக் கைவிடுமாறு அறிவுறுத்தியதாகவும், "அனைவரையும் நாம் தூக்கி வெளியே எறிந்து விடுவோம்; உன்னை கேப்டனாக்குகிறேன். நான் அதற்கு உதவுகிறேன்" என்று சொன்னதாகவும் பரபரப்பாகப் பேசியிருக்கிறார்.
அந்த சமயத்தில் விராட் கோலிதான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவரைத் தான் தூக்கி எறிவேன் என யோக்ராஜ் சிங் கூறி இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை ஆகிய இந்திய அணி வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

அதன் பிறகு அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு, தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அந்தப் போராட்டத்தில் இருந்து மீண்டு வந்த அவர், பின்னர் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடினார். ஆனால், அவரது உடல் தகுதி தொடர்பாக அதிருப்தி அடைந்த இந்திய அணி நிர்வாகம் அவரை அணியிலிருந்து நீக்கியது.
இதைத் தொடர்ந்து, யுவராஜ் சிங் யோ-யோ தேர்வில் பங்கேற்று அதில் தகுதி பெற்றார். இருப்பினும், அவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் அளிக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், அவர் 2019 உலகக்கோப்பைக்கு முன் ஓய்வு பெறும் முடிவை எடுத்தார். அப்போதைய கேப்டன் விராட் கோலி தான் யுவராஜை அணியில் சேர்க்க வேண்டாம் என கூறியதாக பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது யோக்ராஜ் சிங், யுவராஜை ஓய்வு முடிவை திரும்பப் பெறுமாறு கூறியதாகவும், ஆனால் யுவராஜ் அந்த முடிவை பின்வாங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "யுவராஜ் சிங் ஓய்வு பெற்றபோது, நான் அவரை இந்திய அணியின் கேப்டன் ஆக்குவேன் என வாக்குறுதி அளித்தேன். நாம் அனைவரையும் வெளியே தூக்கி வீசிவிடுவோம் என்றேன். ஆனாலும் அவர் எனது பேச்சைக் கேட்கவில்லை, ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார்," என்று கூறினார் யோக்ராஜ் சிங்.
அந்தச் சமயத்தில் யுவராஜ் சிங் இது குறித்துப் பேசுகையில், "யோ-யோ தேர்வில் நான் தேர்ச்சி அடையவில்லை என்றால் ஓய்வு பெறும் வகையில் ஒரு போட்டியில் ஆட வாய்ப்பு அளிக்கிறோம் என்றார்கள். ஆனால் அதையும் அளிக்கவில்லை," என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.