மும்பை: இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஜாம்பவானாக திகழ்ந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை என்பது ரசிகர்களின் மனதில் இன்றும் ஒரு பெரும் குறையாக உள்ளது.
இந்நிலையில், "யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டியவர்" என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், 2016 முதல் 2020 வரை தேசிய தேர்வுக் குழு உறுப்பினராக இருந்தவருமான சரண்தீப் சிங், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த வியப்பூட்டும் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "என்னைப் பொறுத்தவரை, யுவராஜ் சிங் இன்னும் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்க வேண்டிய திறமைசாலி" என்று கூறியுள்ளார்.
யுவராஜ் சிங் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 40 போட்டிகளில் மட்டுமே விளையாடி 1,900 ரன்களை எடுத்துள்ளார். இதில் 3 சதங்களும், 11 அரைசதங்களும் அடங்கும். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மேட்ச் வின்னராக வலம் வந்த யுவராஜால், வெள்ளை உடை கிரிக்கெட்டில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்கள் நிறைந்திருந்த இந்திய மிடில் ஆர்டரில், யுவராஜ் சிங்கிற்கு நிரந்தர இடம் கிடைப்பது சவாலாகவே இருந்தது.
சரண்தீப் சிங்கின் இந்தக் கருத்து, யுவராஜ் சிங்கின் டெஸ்ட் கிரிக்கெட் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை தொடங்கி வைத்துள்ளது. யுவராஜின் அதிரடி ஆட்டமும், அபாரமான திறமையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே பல ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. தகுந்த வாய்ப்புகள் கிடைத்திருந்தால், யுவராஜின் டெஸ்ட் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பதே சரண்தீப் போன்ற முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. இது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.