மும்பை : 2007ஆம் ஆண்டு, செப்டம்பர் 19ஆம் நாள்.. கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாத அந்த சம்பவம் நடந்த நாள் அது.
2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் மண்ணைக் கவ்விய இந்திய அணி, அடுத்து முதல் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயார் ஆனது. டி20 எல்லாம் ஒரு போட்டியா என மூத்த வீரர்கள் சச்சின், டிராவிட் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள தோனி தலைமையில் அதிக இளம் வீரர்கள் கொண்ட அணி தென்னாப்பிரிக்கா சென்றது.
சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மட்டுமே அந்த அணியில் அனுபவ வீரர்கள். அவர்களை வைத்துக் கொண்டு இளம் வீரரான தோனி அணியை வழிநடத்தினார். முதல் குரூப் சுற்றில் ஒரு போட்டி கைவிடப்பட்டது. பாகிஸ்தான் அணியுடனான போட்டி டை ஆனது. அந்த சுற்றில் எப்படியோ முன்னேறி அடுத்த குரூப் சுற்றுக்கு இந்தியா வந்தது.

தன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அடுத்து இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இந்திய அணி முதலில் இங்கிலாந்து அணியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் சேவாக் 68, கம்பீர் 58 ரன்கள் குவித்தனர். உத்தப்பா 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து தோனியுடன் 17வது ஓவரில் ஜோடி சேர்ந்தார் யுவராஜ் சிங். 18வது ஓவரை பிளின்டாப் வீசினார். அவருக்கு காலில் அப்போது காயம் ஏற்பட்டதால் மிகவும் சிரமப்பட்டு பந்து வீசினார். அந்த ஓவரில் யுவராஜ் சிங் அடுத்தடுத்து இரண்டு ஃபோர் விளாசினார்.
காலில் வலி வேறு, இந்தப் பக்கம் யுவராஜ் சிங்கின் பவுண்டரி என கடுப்பில் இருந்த பிளின்டாப், யுவராஜை சீண்டும் வகையில் கெட்ட வார்த்தைகளில் பேச, சூடானார் யுவராஜ் சிங். தன் கோபத்தை ஆட்டத்தில் காட்ட முடிவெடுத்த யுவராஜ் சிங்கின் பலியாடாக சிக்கினார் ஸ்டூவர்ட் பிராடு.
19வது ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பிராடின் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸராக அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்கவிட்டார். ஆறு பந்தில் ஆறு சிக்ஸ். ஒரே ஓவரில் 36 ரன்கள்.
இந்த ஓவருக்கு முன்னதாக 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து இருந்த யுவராஜ் சிங், ஆறு சிக்ஸ் அடித்து 36 ரன்கள் கூடுதலாக சேர்க்க, 12 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதுவே இன்று வரை அதிவேக அரைசதம் அடித்த சாதனையாக உள்ளது.
சர்வதேச போட்டி ஒன்றில், அது ஒருநாள் போட்டியோ, டி20 போட்டியோ, டெஸ்ட் போட்டியோ, எதிலும் அனைத்திலும் இன்று வரை அதிவேக அரைசதம் அடித்த வீரர் யுவராஜ் சிங் மட்டும் தான்.
பிற உள்நாட்டு டி20 தொடர்களில் கிறிஸ் கெயில், ஹசரத்துல்லா ஜஜாய் போன்றோர் 12 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். ஆனால், யாராலும் அவரது சாதனையை முறியடிக்க முடியவில்லை. யுவராஜ் சிங் அந்த சாதனையை செய்து 16 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், என்றும் நீங்காத பசுமையுடன் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் அந்த காட்சிகள் இருக்கின்றன.
அந்தப் போட்டியில் இந்தியா 218 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி போராடி 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதன் பின் இந்தியா 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.